வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, January 28, 2014

பாம்பன் பாலம் (Pamban Bridge)


பாக் நீரிணையில் (Palk Strait)  இந்தியாவின்  தமிழ்நாட்டில்   அமைந்துள்ள  பெரு நிலப் பரப்பையும்  இராமேசுவரத்தையும்  இணைக்கும் ஒரு கொடுங்கைப்  ( Cantilever Bridge) பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம் ஆகும். இது சுமார் 2.3 கி.மீ. நீளம் கொண்ட இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலம் (முதலில் பாந்திரா-வொர்லி கடற்பாலம்) ஆகும். இப்பெயரில் தரைப்பாலம்தொடருந்துப் பாலம் (RAILWAY BRIDGE) இரண்டும் அழைக்கப்பட்டாலும், பொதுவாக தொடருந்துப் பாலத்தையே குறிப்பிடுவர்.

இரண்டு ஏற்ற ஓடுபாதைகளைக் கொண்ட தரைப்பாலத்தில் இருந்து அருகிலுள்ள தீவுகளையும் கீழே செல்லும் தொடருந்துப் பாலத்தையும் காண முடியும்.
பாம்பன் தொடருந்துப் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதன் கட்டுமானம் 1913 ஆம் ஆண்டில் துவங்கி 18 மாதங்களில் முடிக்கப்பட்டு 1914 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர் (இராட்டணப் பாலம்). இதில் 146 சிறு இடைவெளிகள் உள்ளன. இதன் இருபுறமும் உள்ள முக்கிய தூணின் உயரம் 220 அடி ஆகும்.
கப்பல் கடக்கும்போது பாலம் திறக்கப்படும் காட்சி

ரெயில் பாலத்தில் கடக்கும் காட்சி


பாலம் கட்ட தேவையான 18,000 டன் சல்லிகல் 270 கி.மீ. தொலைவிலிருத்தும், மணல் 110 கி.மீ. தொலைவிலிருத்தும் எடுத்து வரப்பட்டது. இதனை கட்ட சிமென்ட்  5000 டன்இரும்பு 18,000 டன் உபயோகப்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே 2007 ஆகத்து 12 இல் புதுப்பித்தத. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன. இப்பாலம் வாரம் ஒரு முறை திறக்கப்படுகிறது. இதன் நூற்றாண்டு விழா 2014 ஆம் ஆண்டு கொண்டாடப் பட விருக்கிறது.
பாம்பன் பாலம் உலகின் மிகவும் துருப்பிடிக்கத்தக்க பகுதியில் (ஐக்கிய அமெரிக்காவின் மயாமிக்கு அடுத்தபடியாக) அமைக்கப் பட்டுள்ளது. இதனால் இதற்கான கட்டுமானப் பணிகள் மிகுந்த சிரமங்களுக்கு இடையிலேயே இடம்பெற்றன. அத்துடன் இப்பகுதிகடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படும் பகுதியுமாகும் 1964 ல் நிகழ்ந்த தனுஷ்கோடி புயலில் இப்பாலத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை.


தினந்தந்தியில் Jan 29 ,2014 லில் வந்த பாம்பன் பால நூற்றாண்டு விழா செய்தி:
பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரெயில் இயக்க வலியுறுத்துவேன் என்று கூறினார். பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா நேற்று (28.01.2014) நடந்தது.



இதில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கார் மூலம் மண்டபம் வந்தார். அவரை மாவட்ட கலெக்டர் நந்தகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோர் மலர்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்து தனி ரெயில் மூலம் பாம்பன் ரெயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்தார். ரெயில்வே பொது மேலாளர் ராஜேஷ் மிஸ்ரா அவரை வரவேற்று அழைத்து சென்றார். நிகழ்ச்சிக்கு பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சுந்தரபாண்டியன், விஞ்ஞானி ராஜன் ஆகியோர் பேசினர்.

 பின்னர் விழாவை தொடங்கி வைத்து டாக்டர் அப்துல் கலாம் பேசியதாவது:– பாம்பன் என்னுடைய வாழ்வில் ஓர் அங்கம். இங்கு சுற்றத்தார்கள் வாழ்ந்தார்கள். இப்போதும் வாழ்ந்து வருகிறார்கள். ராமேசுவரம் எனது சொந்த ஊர், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நூற்றாண்டு விழாவிற்க்காக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பாலம் 


நூற்றாண்டு விழா காணும் இந்த பாம்பன் பாலத்தில் இன்று பயணம் செய்தேன். பூமி சூரியனை சுற்றி வருவதற்கு ஓராண்டாகிறது. இந்த பாலம் கட்டப்பட்ட பிறகு 100 முறை சுற்றி வந்துள்ளது. இந்திய ரெயில்வே நூறாண்டு காலம் இந்த பாலத்தை பாதுகாத்து மேம்படுத்தி உள்ளது. ராமேசுவரம் தீவை இந்தியாவுடன் இணைப்பது இந்த பாலம்.

நான் இன்று ரெயிலில் வந்தபோது மேலே வானம், கீழே கடல். இந்த காட்சி என்னை பரவசப்படுத்தியது. பாலத்திற்குள் ரெயில் நுழைந்து வந்தபோது தென்றல் காற்று வீசி ரீங்காரமிட்டது என் மனதை கவர்ந்துள்ளது.மனித மனங்களை இணைப்பது போல பாம்பன் பாலம் இந்தியாவையும், இந்த தீவையும் இணைத்து நூறாண்டாகிறது. இப்பாலம் கட்டிய பின்பு இங்கிருந்து தனுஷ்கோடி சென்று அங்கிருந்து இலங்கைக்கு செல்ல வழியாக அமைந்தது. பாலம் தொழில்நுட்பத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களை, மதங்களை, மனிதத்தை இணைப்பது போல இந்த தீவை இணைத்தது கோடிக்கணக்கான மக்களின் மனதை நெகிழச்செய்துள்ளது. இது இன்னும் பல கோடி ஆண்டு நீடித்து நிலைக்க வேண்டும். இந்தியாவில் கடல் மீது போடப்பட்ட பாலம் இதுதான். 1914ல் இப்பாலம் போடப்பட்ட பின்னர் தான் வர்த்தகம், சுற்றுலா மேம்பட்டுள்ளது. எனது தகப்பனாரும் இந்த பாலத்தில் பயணம் செய்துள்ளார். 97 வயதான என் அண்ணனும் இதில் பயணம் செய்துள்ளார். நானும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் போது இந்த பாலத்தில் பலமுறை பயணித்துள்ளேன்.

உலகிலேயே துருப்பிடிப்பதில் 2ம் இடம் வகிக்கும் இந்த பகுதியில் அமைந்துள்ள இப்பாலத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்கு தென்னக ரெயில்வேக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உறக்கத்தில் வருவதில்லை கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. கனவாக இருந்தது நனவாக நடந்து வருகிறது. ராமேசுவரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரெயில் இயக்கவும், அதற்கு பாம்பன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டவும் வலியுறுத்துவேன். இது கண்டிப்பாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அவர் பேசும்போது நான் விளக்காக இருப்பேன், நான் படகாக இருப்பேன், நான் ஏணியாக இருப்பேன், அடுத்தவரை துன்புறுத்த மாட்டேன், மனநிறைவோடு வாழ்வேன் என்று கூறி அதனை பொதுமக்கள் அனைவரும் திரும்ப கூறும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து கல்வெட்டை திறந்து வைத்தார். ரெயில்வே கோட்ட மேலாளர் .கே.ரஸ்தோகி நன்றி கூறினார். பின்னர் டாக்டர் அப்துல் கலாம் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார். பொந்தம்புளி அருகே ரூ.25 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலக கூடுதல் கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.

முன்னதாக அவரை ராமேசுவரம் நகரசபை தலைவர் அர்ச்சுணன் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். விழாவில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ, பாம்பன் முன்னாள் ஊராட்சி தலைவர் முகமது அனிபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, January 25, 2014

சாப்பிடுவது எப்படி?


ஒரு இந்து தமிழ் நாளிதழிலிருந்து

உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை நாம் ஏற்றுக் கொண்டிருந்தாலும் கூட, "உணவே மருந்து" என்ற விஷயம் நமது உணவு முறையில் ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது. இன்றைக்கு ஒரு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரைத் தேடி ஓடுகிறோம் அல்லது அலோபதி மருந்துகளைச் சாப்பிடுகிறோம். அந்தக் காலத்தில் நமது வீட்டுப் பெரியவர்களோ மருந்துக்குப் பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படிக் காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவுப் பழக்கங்கள், நமது மிகப் பெரிய பொக்கிஷம்.
வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கியப் பண்டிகை, திருவிழா என்றாலும் வாழையிலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஹோட்டல்களும்கூட இதைப் பின்பற்றுகின்றன. வாழையிலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவக் குணங்கள் கொண்டதாகவும், செரிமானத்துக்கு உதவுவதாகவும் இருந்தது.
ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவுப் பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடையத் தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுவது இதன் காரணமாகத்தான்.
உணவைச் சுவைத்து, அரைத்துச் சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்ஸைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று குறிப்பிட்டார்கள்.
உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமிலச் சுரப்பால் உருவாகக் கூடிய அல்ச ருக்கு, இதுவே மருந்தாக இருக்கும்.
இனிப்பு, சாம்பார், ரசம், மோர் என்ற வரிசைக்கிரமத்தில் உணவைச் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் நமது உணவைச் செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும்.
சாப்பாட்டுக்கு முன் சூப் சாப்பிட்டால் அல்சர் வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன. குளிர் நாடுகளில் இருப்பவர்களுக்குப் பசி உண்டாக்குவதற்குச் சூடான சூப்பைக் குடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் வெப்பமண்டல நாட்டில் வாழும் நமக்கு, அது எப்படி நன்மை தருவதாக இருக்கும்?
அதேபோல் பழங்களைச் சாப்பாட்டுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. சாப்பாட்டுக்குப் பின் டெசர்ட்டாக சாப்பிடுவதும் பெரிய பலன் தராது. பழத்தின் பாலிஃபீனால்கள், மருத்துவக் குணமுள்ள ஆல்கலாய்டுகள் உடலில் சேர வேண்டுமெனில் பழத்தைத் தனியாகவோ அல்லது முதல் உணவாகவோ சாப்பிடுவது நல்லது.
அதேபோலச் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்டு 1/2 மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்ஸைமை நீர்க்கச் செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.
காலையில் குளிர்ந்த நீர் 2 டம்ளரும் இரவில் படுக்கும் முன் 3 டம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடல் உறுதியாகும். சாப்பாட்டின் ஆரம்பத்தில் தண்ணீர் குடித்தால் உடல் சூட்டைத் தணித்து உடல் இளைக்கும், உணவின் இடையில் தண்ணீர் குடித்தால் நடுத்தரமான உடல் பருமன் ஏற்படும். இறுதியில் தண்ணீர் குடித்தால் உடல் பருக்கும். பித்தம் (உடல்சூடு) இருப்பவர்கள் குளிர்ந்த நீரும், வாதம், கபம் (சளி) இருப்பவர்கள் வெந்நீரும் குடிப்பது சிறந்தது. வெந்நீர் உடல் சூட்டைத் தூண்டிப் பித்தத்தைச் சுத்தம் செய்து, இருமல், சளியைக் குறைக்கும்.
நமது உணவில் அனைத்துச் சுவைகளும் சேர்த்துக்கொள்ளப்பட்டது மட்டுமில்லாமல் சரிவிகித உணவாகவும் இருந்தது. அதனால் நமது உணவில் அனைத்துச் சத்துகளும், செரிமானத்துக்குத் தேவையான விஷயங்களும் உள்ளன. அந்தப் பழைய முறையைத் தெரிந்துகொண்டு பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்களைத் தவிர்க்க முடியும்.

எல்லாம் சரி . ஆனா ஒன்னுமட்டும் மறக்காதீங்க நல்லா பசி எடுத்தபின் நல்லா சாப்பிடுங்க .அதுதான் முக்கியம்

Sunday, January 12, 2014

தை பொங்கல் வாழ்த்துக்கள்

www.arrowsankar.blogspot.in



"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.

போகி பண்டிகை
"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
காணும்பொங்கல்
 
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம்.

இந்த பொங்கல் நன்னாளில்
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms