வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Sunday, November 29, 2015

ரூ 55 கோடியில் திருமணம்

நாட்டில் பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் கேரளத்தில் ரவி பிள்ளை தனது மகள் திருமணத்தை ரூ. 55 கோடியில் நடத்திய திருமணம் அனைவரையும் ஈர்த்தது.

திரு.ரவி பிள்ளை கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர், அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ் நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார். 
திருமண மேடை
எனினும் தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை கைவிட்டு விட வேண்டிய நிலை.  பின்னர் 1978ஆம் ஆண்டு சவுதிக்கு சென்ற ரவி பிள்ளை, முதலில் சவுதியில் நாஸர் அல் ஹாஜ்ரி என்ற கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து தொழிலை தொடங்கினார். 150 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ந்தது. பின்னர்  ஆர்.பி என்று பெயர் மாற்றப்பட்டு, இன்று 70 ஆயிரம் ஊழியர்கள் பணி புரியும் ஆர்.பி குழுமமமாக வளர்ந்து நிற்கிறது. பஹ்ரைன்,கத்தார், அமீரகம் மற்றும் கிழக்காசிய நாடுகளில் 26க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இன்று வளைகுடா நாடுகளிலேயே, இவரது ஆர்.பி குழுமம்தான் முன்னணி கட்டுமான நிறுவனம் ஆகும்.
மணமக்கள்
கடந்த 2014ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ், உலகின் 988ஆவது பணக்காரராக இவரை தேர்வு செய்தது. இந்தியாவை பொறுத்தவரை 30வது பணக்காரர் ஆவார். வளைகுடா நாடுகளை பொறுத்தவரை மிகவும்  சக்தி வாய்ந்த 4வது இந்திய பிரமுகர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. தற்போது 62 வயது நிரம்பிய ரவி பிள்ளை கீதா தம்பதியருக்கு கணேஷ், ஆர்த்தி என இரு குழந்தைகள். இதில் ஆர்த்தி- மருத்துவர் ஆதித்யா விஷ்ணு திருமணம்தான்  கொல்லத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்(26.11.2015) நடைபெற்றது.
மணப்பெண் ஆர்த்தி தந்தை திரு.ரவிபிள்ளையுடன்
இந்த திருமணத்திற்காக கொல்லம் ஆஷ்ரம் மைதானத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 3.50 லட்சம் சதுரடியில் பிரமாண்டமான செட் போடப்பட்டது. 'பாகுபலி 'பட புகழ் ஆர்ட் டரைக்டர் சாபு சிரில், மூன்று மாதங்களாக உழைத்து இந்த பிரமாண்ட செட்டினை வடிவமைத்தார். இதற்காக மும்பையில் முதலில் இந்த செட்கள் அனைத்தும் களிமண்ணால் வார்படமாக உருவாக்கப்பட்டது. பின் பிளாஸ்டர் ஆப் பாரிஸ்மூலம் அவைகள் இணைக்கப்பட்டன. இதற்கே 40 நாட்கள் பிடித்துள்ளது.

திருமண செட் போடுவதற்கு மட்டுமே ரூ.23 கோடி செலவாகியுள்ளது. அதோடு 30 ஆயிரம் விருந்தினர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான பந்தலும் போடப்பட்டிருந்தது. மணமேடை மட்டும் விரிந்த தாமரை இதழ் போல அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

சவுதி, அமீரகம், குவைத்,கத்தார் அரச குடும்பத்தினர் பலர் தனி விமானங்களில் திருமணத்தில் பங்கேற்க வந்திருந்தனர். மற்றும் ஏராளமான வெளிநாட்டு பிரதிநிதிகளும் திருமணத்தில் பங்கேற்றனர். ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் மம்முட்டி உள்ளிட்ட கேரள நட்சத்திரங்களும் திருமணத்தில் பங்கேற்றனர். நடிகைகள் மஞ்சு வாரியார், ஷோபனா ஆகியோரது நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. கர்நாடக இசை புகழ் காயத்ரியின் பக்தி இசை கச்சேரியும் நடைபெற்றது.
திருமண விழாவில் கலந்துக் கொடண்டவர்களின் ஒரு பகுதி
திருமணத்திற்காக பாதுகாப்புக்காக மட்டும் கேரள போலீசாருடன் இணைந்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்டிருந்தது. அந்த வகையில் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருமண விருந்தில் உள்நாட்டு உணவுவகைகளுடன் வெளிநாட்டு உணவுகளும் இடம் பெற்றிருந்தன.இந்ததிருமணத்திற்காக மொத்தம் ரூ.55 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ரவிபிள்ளை கூறுகையில், ''எனது மகள் திருமணத்தை பிரமாண்டமான நடத்தி காட்ட வேண்டுமென்பது மட்டும் எனக்கு நோக்கமில்லை. இந்த திருமணத்தையொட்டி பல்வேறு மக்கள் நலப்பணிகளையும் மேற்கொண்டுள்ளேன். முக்கியமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டைகள், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு ரு.10 கோடிக்கு மேல் நிதியுதவி அளித்துள்ளேன்'' என்றார்.

Print Friendly and PDF

Wednesday, November 25, 2015

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா

உலக பிரசித்திப்பெற்ற பஞ்ச பூதத்தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஆறாம் நாள்  21-ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், ஏழாம் நாள் 22-ம் தேதி மகா தேரோட்டமும் நடைப்பெற்றது.
விழாவில் முதலில் ஏற்றப்பட்ட பரணி தீபம் 

தீபத்திருவிழாவின் உச்சகட்டமாக 10-ம் நாளான 25.11.2015 அன்று, மகா தீபப்பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு, பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன் ஒருவனே பலவாக காட்சியளிக்கிறான் என்ற ஏகன் அனேகன்' தத்துவத்தை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 2.30 மணியில் இருந்து அம்மனி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 5 மணியளவில், அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். பின்னர், உமையாளுக்கு இடப்பாகம் வழங்கிய சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவமாடியபடி மாலை 5.57 மணிக்கு கோயிலுக்குள் இருந்து அங்கு வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் அர்த்தநாரீஸ்வர் காட்சியளிப்பது வழக்கம். அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டி, கோயில் தங்க கொடிமரம் அருகே அகண்டத்தில் தீபம் ஏற்றினர்.












விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள், நீதிபதிகள்


ட்ரம்ஸ் இசை கலைஞர் சிவமணி இசை நிகழ்ச்சி 






விழாவில் நடிகர்கள் சந்தானம், மயில்சாமி மற்றும் பலர்






இதையடுத்து சரியாக மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அண்ணாமலையாரை போற்றும் பாமாலைகளும், சங்கொலியும் முழங்கின. மலை மீது ஜோதி வடிவாக அண்ணாமலையார் தோன்றியதைக் கண்டு, திரண்டிருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள்அண்ணாமலையாருக்கு அரோகரா' என விண்ணதிர முழக்கமிட்டனர்.

இந்த திருவிழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியர் ஏ.ஞானசேகரன் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள், நீதிபதிகள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். ஏ.டி.ஜி.பி தலைமையில், 4 ஐ.ஜி, 2 டி.ஜ.ஜி, 19 எஸ்.பி, 8 ஏ.எஸ்.பி, 20 ஏடி.எஸ்.பி, 68 டி.எஸ்.பி மற்றும் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி :தினமலர்,தினந்தந்தி,தினகரன் மற்றும் கூகுள் இமேஜ்ஸ்
Print Friendly and PDF

Tuesday, November 24, 2015

கார்த்திகை தீபம்

உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.


இறைவன் ஏகனாய் இருந்து எங்கும் அநேகனாய் ஒளிரும் தத்துவம் ஒளி வழிபாடு அதுவே தீப வழிபாடு.

நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கு ஞானம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும். எனவே இந்த மாதத்தில் முழுநிலவும் கார்த்திகை விண்மீன்களும் சேரும் நாளில் நெருப்பு ஸ்தலமான திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் எங்கும் ஒளி வெள்ளமும் ஞானமுமாய் நிறைந்திட வழிக்காட்டுகிறது.


பஞ்ச பூத ஷேத்திரங்களுள் (ப்ருதிவி ஷேத்திரம் காஞ்சிபுரம், ஜலஷேத்திரம் திருவானைக்கா, தேஜஸ் ஷேத்திரம் திருவண்ணாமலை, வாயு ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி, ஆகாசசேஷத்திரம், சிதம்பரம்) ஜோதி ஷேத்திரம் திருவண்ணாமலை. ஜோதிஸ்  என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி. இப்படிப்பட்ட ஷேத்திரம் திருவண்ணாமலை.

திருவண்ணாமலை கோவிலில் மலைமேல் தீபம் ஏற்றப்படும்போது எல்லார் வீட்டிலிலும் தீபம் ஏற்றுவது இத்திருவிழாவின் சிறப்பு.


எங்கும் நிறைந்த இறைவன் எங்கள் வீட்டிலிலும் உறைவான் அருள் புரிவான் எனும் இறை நம்பிக்கையில் தீப ஒளி விளக்கு ஏற்றுவோம்,அருள் பெறுவோம்.

Print Friendly and PDF

Friday, November 20, 2015

மாமா மாப்ளே,...

வாங்க மாப்ளே வாங்க என்று முகம் முழுவதும் சிரிப்புடன் வரவேற்றார் அந்த உறவினர். கும்பகோணத்தில் (26.10.2015) உள்ள என் சகலையின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியின் போது வீட்டு வாசலில் நின்று என்னை வரவேற்றார் அந்த உறவினர்.


வாங்க மாமா வாங்க என்று அவரை எதிர்க்கொண்டேன்.

எப்போ வந்தீங்க மாப்ளே என்று மேலும் குசலம் விசாரித்தார் அவர்.

நான் நேத்தே வந்துட்டேன்.விடியற்காலை மூணு மணிக்கு அய்யர் வந்துட்டார் அப்பவே வந்து ஹோமத்துலே கலந்துக்கிட்டு டிபன் எல்லாம் முடிச்சுட்டு ரூமுக்கு போய்ட்டேன்.அசதியா இருந்தது கொஞ்சம் தூங்கி எழுந்துட்டு வந்தேன்என்றேன் நான்.

ஆமாம் ஆமாம் நான் அப்பவே மச்சான்கிட்டே கேட்டேன். சொன்னாரு என்று பதில் சொன்ன அந்த உறவினர்,வாங்க இங்கே உட்காருங்க என்று புது வீட்டு வாசலில் போடப்பட்டு இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை காட்டினார் அவர்.

கிரக பிரவேச நிகழ்ச்சிக்காக வீட்டு வாசலில் சாமியானா போடப்பட்டு கலர்கலராய் பிளாஸ்டிக் நாற்காலிகள் வரிசையாய் போடப்பட்டு இருந்தது.முன் வரிசையில் அவருக்கு அருகில்  அந்த உறவினர் உட்கார சொன்னார்.

அந்த உறவினர் எனது சகலையின் மைத்துனர் ஆவார். உறவினர்க்கு உறவினர் என்றால் எனக்கும் உறவினர் தானே. அதனால் வீட்டு விசேங்கள்,கல்யாண சுப நிகழ்ச்சியின் போது சந்திக்கும்போதெல்லாம் குசலம் விசாரித்து கொள்வோம்.அந்த வழக்கத்தில் அவர் என்னை மாப்ளே என்றும் நான் அவரை மாமா (என்னை விட வயதில் மூத்தவர்) என்றும் அழைத்துக் கொள்வோம்.

மேலும் அவரே தொடர்ந்தார்.அப்புறம் வீட்லே ,பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க என்ன பண்றாங்க.” என்றார்

எல்லோரும் இங்கே வந்துருக்காங்க.” என்றேன். மற்ற சுக சௌக்கிய விபரங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக் கொண்டோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவர் பேச்சை வேறுபக்கம் திருப்பினார்.

மாப்ளே மணி பதினொன்றை ஆவுது.எப்படியும் ஒரு மணிக்குதான் சாப்பாடும் வரும்.அதுவரைக்கும் இங்கே நம்ம என்ன செய்ய போறோம் வாங்க கடை தெருவு வரைக்கும் போயிட்டு வரலாம்.”என்றார்.

மாமா காபி டீ ஏதாவது சாப்பிடலாமா? என்றேன் நான்.

அவர் சிரித்தார்.ஆமாம் மாப்ளே பெரிய டீ சாப்பிடலாம் வாங்க.” என்றார்.

எனக்கு அவர் சொன்ன பெரிய டீ என்னவென்று புரிந்தது. எனக்கு பழக்கம் இல்லேயே,..” என்றேன்.

மாப்ளே எனக்கு யாரையும் கட்டாயப்படுத்தி பழக்கமில்லே,சும்மா கம்பேனி கொடுங்க.” என்றார்.

சரி என்று அவருடன் அவருடைய மோட்டார் சைக்கிளில் கிளம்பினோம்.

அவருடைய மோட்டார் சைக்கிள் சில பல தெரு சந்துக்களை கடந்து கும்பேஸ்வரர் கோயில் பக்கத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்றது.

அவரே ஆரம்பித்தார். என்ன மாப்ளே மெட்ராஸ்ல இருந்துட்டுப் பழக்கமில்லேன்னு சொன்ன எப்படி.ஒரு பீர் (பெரிய டீ) மட்டும் சாப்பிடுங்க. என்று கெஞ்சினார்.

மாமா கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடிதான் நான் யாரையும் கட்டாயப்படுத்தி பழக்கமில்லேன்னீங்க,... என்று நான் ஞாபகமூட்டியவுடன் அவர், இல்லே  மாப்ளே நான் மட்டும் சாப்பிடும்போது நீங்க சும்மா இருந்தா நல்லா இருக்காது இல்லே என்று உபசரித்தார்.

பரவாயில்லே நான் வேண்ணா சைடிஷ் சாப்பிட்டுக்கிறேன் என்றேன்.

சரியென்று ஆமோதித்ததுப் போல் டாஸ்மாக் கடைக்கு ஒட்டி இருந்த பாருக்குள்ளே அழைத்துக் கொண்டுப் போனார்.

குப்பென்று மதுவுடன் கலந்த அசைவ உணவு வாடை வந்தது. ஒரு மெல்லிய புகை இருளும் எங்களை ஆட்கொண்டது.

ஒரு எக்சாஸ்ட் பேன் இர்ர்ர்ர்... என்ற சத்தத்துடன் சுற்றிக் கொண்டிருக்க அதன் கீழ்  சிவப்பு கலரில் ஒரு பெரிய ப்ரிட்ஜ். அதன் கதவின் கண்ணாடியிலேயே பல பீரும் சில கூல்டிரிங்ஸ் பாட்டிலும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. அதன் பக்கத்தில் சின்ன மர டேபிளும்(கல்லாப்பெட்டி) நீலவண்ண டர்கி டவலால் மூடப்பட்டு இருந்த மெத்தை சுழல்நாற்காலியில் வெள்ளைச் சட்டை, கரை வேஷ்டி அணிந்த ஒருவர் எடுப்பாய் மேல் பட்டன் கழற்றிவிட்டு தங்க சங்கிலி தெரிய உட்கார்ந்து இருந்தார். அவர் எங்களை பார்த்ததும் ஒரு மெல்லிய புன்னகை பூத்தார். என் உறவினர் அவருக்கு ஒரு வணக்கம் சொன்னார்.என் பக்கம் திரும்பி பார் ஓனரூ என்றார்.


ஒரு பக்கம் சிறிய சிமென்ட் மேசை மேல் பம்ப் ஸ்டவ் மீது தோசைக்கல்லில் ஆம்லேட் வெந்து கொண்டிருந்தது. அதை புரட்டி போட கருப்பு கலர் டீ சர்ட்டும் கலர் பூப்போட்ட லுங்கியும் அணிந்த வேர்வையுடன் கொஞ்சம் அழுக்காய் இருந்த ஒருவன் தயாராய் நின்றிருந்தான். இன்னொரு கடாயில் எண்ணெய் சூடாகிக் கொண்டிருக்க மெல்லிய கனத்துடன் வட்டவட்டமாக வெட்டப்பட்ட மீன் மிளகாய் பொடியில் ஊறி ஒரு தட்டில் வைக்கபட்டிருந்தது. அருகிலேயே பல அசைவ அயிட்டங்கள் ஒரு பேசினில் மசாலாவில் ஊறி சிவப்பாய் வறுக்க தயாராக இருக்க, அதன் மேல் பூச்சி,ஈக்கள் வராமல் இருக்க வலை குடை ஒன்றை சார்த்தி இருக்க அதனுள் சில ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் தோரணமாய் பாலிதீன் பாக்கெட்டில் வறுத்த பருப்பு வகைகள் தொங்கி கொண்டிருந்தது. வேகவைத்த மூக்கடலை, வேர்க்கடலை ஆயில் பளப்பளப்புடன் கொஞ்சம் கொஞ்சமாக சிறு பிளாஸ்டிக் கப்புகளில் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இன்னொரு பக்கம் நான்கைந்து ஸ்டீல் மேசைகளின் இருபுறமும் ஆட்கள் சரக்கும் கையுமாக அமர்ந்தும் நின்றும் குடித்தும் கொண்டிருந்தனர். சிலர் புகையாற்றியும் கொண்டிருந்தனர். மதுவின் வாடையும் சிகரெட்டின் புகையும்,அடுப்பின் புகையும் சேர்த்து கொஞ்சம் என் குடலை புரட்டியது. எங்களை மீறி சிலர் ஊராய்ந்தும் வருவோரும் போவோரும்  சென்னை  சைதாபேட் மார்கெட்டை ஞாபகம் மூட்டியது. அந்த உள்கடையை கடந்து அவர் என்னை அழைத்து செல்ல எதிரில் ஒருவன் அவருக்கு வணக்கம் வைத்தார். இவரும் எதிர் வணக்கம் வைத்து விட்டு இன்னும் கடந்து கண்ணாடி கதவுள்ள அறைக்கு என்னை சைகை காட்டி அழைத்து சென்றார்.


ஏசி பார்.கொஞ்சம் புகை குறைந்து இருந்தது.ஆனால் அந்த கெட்ட வாடை மெல்லியதாய் இங்கேயும் தொடர்ந்தது.அந்த அறையிலும் நான்கைந்து ஸ்டீல் மேசைகள் இருந்தது. ஒரு புளுஸ்டார் ஏசி இருபத்திரண்டு டிகிரி காட்டியது. ஒரு சீலிங்க் பேன் மெல்ல சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு சிலரே இருந்தனர்.

என்னை பார்த்த அந்த உறவினர், ஏசி பார்தான் பெஸ்ட் மாப்ளே  எந்த தலவலியும் இருக்காது என்று ஒரு டேபிளை தேர்ந்தெடுத்து அதன் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை எதிர் நாற்காலியில் அமர சொன்னார். இந்த அறைக்கு வரும்முன் வணக்கம் வைத்தவன் அந்த உறவினர் அருகில் வந்தான்.

மீண்டும் ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு, என்ன தலைவரே ஆப்பா,கோட்ரா,..என்றான். அந்த உறவினர் இந்த பாருக்கு ரெகுலர் கஸ்டமர் என்பது எனக்கு புரிந்தது.

இல்லே செல்வம் மெட்ராஸ்ல இருந்து மாப்ளே வந்து இருக்கார்,அவருக்கு இதெல்லாம் பழக்கமில்லே,எனக்கு கம்பேனி தரத்துக்கு கூட வந்திருக்கார். என்று என்னை அவனிடம் அறிமுகம் செய்தார்.அவன் எனக்கும் ஒரு சின்ன வணக்கம் வைத்தான். ஆனால் என்னை ஒரு ஜெந்து போல பார்த்தான். பத்து இருபது நாள் தாடி அவன் முகத்தை தீவாய் ஆக்கிமிரத்து இருக்க,மேலும் அவன் முகம் சிலபல கட்டிங்கில் வீங்கி இருந்தது. ஒருவித சிராய்ப்பு இடது கன்னத்தில் ஏற்பட்டிருந்தது. மேலிரண்டு பட்டன்கள் இல்லாத பழைய வெள்ளை சட்டையும் மங்கலான வெள்ளை வேஷ்டியும் அணிந்து இருந்தான்.

அந்த ஒரு உறவினரே மீண்டும் செல்வத்திடம்  தொடர்ந்தார். ஹாட்ல்லாம் வேண்டாம், ஒரு கேஎப் பீர்,கூட புரூட் சேலட் ரெண்டு என்று சொல்லிக்கொண்டே என்னை அவர் பார்க்க நானும் சரியென்பது போல் தலையசைக்க   அவன் பணத்திற்க்கு  அந்த உறவினரிடம் கையை நீட்ட அந்த உறவினர் சாப்பிட்ட பிறகு தரேன் என்று சொல்ல நான் உடனே ஐநூறு ரூபாய் நோட்டை அவனிடம் கொடுத்து போய் எடுத்தாங்க என்றேன்.

உடனே அந்த உறவினர் என்ன மாப்ளே, எங்க ஊர்லே வந்து நீங்க பணம் தர்றதா என சின்னதாய் பொய்கோபம் காட்டி செல்வத்திடம், பணம் கொடுத்தா உடனே வாங்கிறதா, அவர்ட்டே கொடு நான் தர்றேன் என்று அதட்டினார்.

நானே தொடர்ந்தேன், இதிலே என்ன இருக்கு மாமா நான் செலவு செய்யக்கூடாதா என சொல்ல, அந்த உறவினர் இல்லே மாப்ளே அது வந்து,... என வழிய செல்வம் கொஞ்சம் முழிக்க,நான் பரவாயில்லே போப்பா சீக்கிரம் கொண்டு வா என ஆணையிட அவன் நகர்ந்தான்.

செல்வம் பீரும் டிஸ்போஸ் பிளாஸ்டிக் கிளாசும் மற்றும் ரெண்டு புரூட் சேலட்டும் கொண்டு வந்து டேபிளில் வைத்தான்.

இன்னும் ஏதாவது வேணும்னா கொரல் கொடு தலவரே என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் செல்வம்.

பீரை ஒப்பன் செய்து நுரை வராதவாறு பிளாஸ்டிக் கிளாஸ் முழுக்க நேர்த்தியாக ஊற்றினார் அந்த உறவினர். ரொம்பநாள் அனுபவம் போலிருக்கிறது.

அந்த உறவினர் ஒரு சிப் பீரை குடித்துவிட்டு புரூட் சேலட் இருந்த கப்பிலிருந்த அன்னாசி பழத்துண்டை கையில் எடுத்துக் கொண்டு எடுத்துக்கங்க மாப்ளே என்று எனது புரூட் சேலட் கப்பை காட்டினார். மேலும் கேஎப் பீர் மாதிரி எந்த பீரும் வராது மாப்ளே.சும்மா சுமூத்தா இருக்குது.என்றார்.

நான் ஒரு துண்டு பழத்தை வாயில் போட்டுக் கொண்டே அவரை கேட்டேன். ஏன் மாமா,கடையிலே பீரை விக்காம பார்ல வைச்சி விக்குறாங்க என்றேன்.

அவர் இன்னொரு சிப்பில் டம்ளரில் உள்ள பீரை முழுவதும் குடித்துவிட்டு எனக்கு பதிலளிக்க தயாரானார்.

மாப்ளே கடை கவர்மேண்டுது, பார் தனியார்து. பீரை கடையிலே வைச்சி வித்தா பீர் சாப்டறவன் பாருக்கு வரமாட்டான். அதுவில்லாம கூலா கிடைக்கினும்னா எக்ஸ்ட்ரா காசு வைச்சி பார்காரன் விப்பான்.என்று விளக்கம் சொல்லிவிட்டு பீரை கிளாசில் ஊற்ற ஆரம்பித்தார் அவர்.

அப்ப பார்ல உள்வியாபாரம் நடக்குது,மறைமுகமா தனிப்பட்ட ஆளு டாஸ்மாக் கடைய நிர்வாகம் பண்றாங்க என்றேன் நான்.

அத விடு மாப்ளே, பீர் சில்லுன்னு வேணும்னா பார்ல கிடைக்கும், அப்படியே வேணும்னா கடையிலே வாங்க வேண்டியதுதான். என்றார் அவர்.

மீண்டும் ஒரு சிப் ஒரு பழத்துண்டு என பீரை தொடர்ந்தார் அவர்.

நான் தொடர்ந்தேன். மாமா இங்கே எதுவும் சுத்தமா இல்லே,மீனு கோழி கறியெல்லாம் எப்ப வாங்கினதும் தெரியலே.வெளியே ஒருத்தன் குடிச்சிட்டு சைட்ல துப்புறான். ஒருத்தன் சிகரெட்ட புடிச்சி புகையா உட்றான். மீன் வறுக்குற வாடை மூக்ல முள்ளா குத்துது. என்னவோ ஒரு நாத்தம் குடலை பொரட்டுது.இங்கே வந்து இந்த கருமத்த குடிக்குனுமா.

அவர் இப்ப ஏதோ தயாரானதுப் போலே சிலிர்ப்பி ஆரம்பித்தார்.
மாப்ளே உங்கள மாதிரி பெரிய ஆளுங்க பெரிய கிளப்புக்கு போய் இங்கே கருமமா இருக்குறத அங்கே மர்மமா சாப்ட்டு சும்மா ராசா மாதிரி யாருக்கும் தெரியாம நைசா இருந்துடுவீங்க. நம்மள மாதிரி ஆளுங்க அன்னாடம் சாப்ட்றதுக்கு இதுதான் எங்களுக்கு சொர்க்கம் .என்று ஏதோ பெரிய வியாக்கியானம் சொன்னார்.

பீர் தீர்ந்தது. அவர் சாலட்டும் தீர்ந்தது. என் சாலட் அப்படியே இருந்தது.

சொல்லிவைத்தார் போல் செல்வம் வந்தான். என்ன தலைவரே வேற ஏதாவது,.... என்று இழுத்தான்.

இன்னொரு கேஎப் சில்லுன்னு என்றார் அந்த உறவினர்.

பீர் ஒப்பன் செய்தபடி கொண்டு வந்து வைத்தான் செல்வம்.

மீண்டும் பீரை  நுரை வராதவாறு பிளாஸ்டிக் கிளாசில் ஊற்றினார் அந்த உறவினர். இந்த முறை கொஞ்சம் நுரையானது. போதை ஏறி இருக்க வேண்டும்.

குடித்துக்கொண்டே என் சாலட்டை எடுக்க ஆரம்பித்தார். கிளாசில் இருந்த பீர் காணவில்லை.டக்கென்று குடித்து இருந்தார்.

இன்னொரு முறை கிளாசில் பீரை ஊற்றினார். இந்த முறை நுரை வழிந்தது. போதை தெரிந்தது.

செல்வத்தை கூப்பிட்டு மூக்கடல கொடுப்பா என்றார்.அவன் ஒரு கப் கொண்டு வந்தான். பீர் காலியானது.

போலாமா மாப்ளே என்றார் அவர். செல்வம் வந்தான்.ஏதோ கணக்கு சொல்லி போக மீதி நூறு ரூபாய் என்னிடம் திருப்பி தந்தான்.(பீர் -2 – ரூ.280 + சாலட் -2 –ரூ.50 +  பிளாஸ்டிக் கிளாஸ்-ரூ.10 + மூக்கடல - ரூ.10. ஏசி சார்ஜ் - ரூ.50 ஆக ரூ.400/-)

கிளம்ப தயாரான போது, நில்லு செல்வம் என்று கூறி  பாக்கெட்டில் கையை துழாவி பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் தந்தார் அந்த உறவினர்.

டிப்சு என்றார் என்னை பார்த்து. செல்வம் நோட்டை டக்கென வாங்கி யாரோ அழைக்க மறைந்தான்.

(உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...
- “Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்)

டாஸ்மாக்கில் நான் கண்டதும் நெருடல்களையும் கீழே வரிசைப் படுத்தி உள்ளேன்
1.டாஸ்மாக்கில் பார் என்ற பெயரில் தனியாரின் அதிகாரம் செயல்படுகிறது.

2.பொருளின்(சரக்குகளின்) விலையில் இருபது முப்பது சதவீதம் தனியாருக்கு மறைமுகமாக போகிறது.(டாஸ்மாக்கின் சிஸ்டர் கான்சர்னாக பார்கள் செயல் படுகின்றன)

3.ஏழையின் வருமானம் இதன் மூலமாக சுரண்டபடுகிறது.

4.நோய் தொற்று இங்கே இருந்தும் பரவுகிறது.

5.சோம்பேறிகள்,குற்றங்கள் ஏற்பட வழியாகிறது.

மொத்தத்தில் பலவகையில் இழப்புகளும்,அவமானங்களும், தொந்தரவுகளும்  ஏற்படுகிறது. எனவே டாஸ்மாக்கை மூட அரசு தயாராக வேண்டும்.
Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms