வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Monday, April 30, 2012

மே தின வரலாறு


மே தினம்
மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.

பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம்

ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.

ரஷ்யாவில் மே தினம்

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் கறுப்பு தினம்

நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியாவில் மே தினம்

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.


உழைப்பாளர் சிலை 


நம்மில் பலர் சென்னை  மெரீனா கடற்கரையில்  உள்ள உழைப்பாளர் சிலையை (தொழிலாளர் சிலை)யை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள்.
இந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் ?
அவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.
4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப் படுத்துவதாக  இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்த ருக்கிறது.
D.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலைபாட்னாவில் உள்ள மார்ட்டிர்ஸ் மெமோரியல்(வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை  சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
இவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு  தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.

Monday, April 23, 2012

அண்ணா மேம்பாலம்


அண்ணா மேம்பாலம் 

பொதுவாக ரெயில் பாதையின் குறுக்கே அல்லது ஆறுகள், கால்வாய்கள் குறுக்கேதான் மேம்பாலங்கள் கட்டுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாநகர வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
 
தமிழகத்தின் தலைநகர் சென்னை நகரில் 1973 ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் இந்த புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட்ரோடு) ஜெமினி சந்திப்பில் இந்த பாலம் அமைக்கப்பட்டது. சென்னை நகரின் அதிகமான வாகன போக்குவரத்து அண்ணாசாலை வழியாகத்தான் நடைபெறுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பாலத்தைக் கட்ட அப்போது ஆன செலவு ரூ.66 லட்சம்தான். மேம்பாலத்தின் நீளம் 1,250 அடி. அகலம் 48 அடி ஆகும். 21 மாதங்களில் (2 ஆண்டு) கட்டி முடிக்கப்பட்டது. முதலில் இந்த மேம்பாலத்தை ஜெமினி மேம்பாலம் என்றே மக்கள் கூறி வந்தார்கள். முதல் அமைச்சர் கருணாநிதி அதன் திறப்பு விழா பற்றி நிருபர்களிடம் கூறும்போது, "அது ஜெமினி மேம்பாலம் அல்ல. அறிஞர் அண்ணா மேம்பாலம் என்று அழைக்கப்படும்" என்று அறிவித்தார்.   அதன்படி அண்ணா மேம்பாலம் திறப்பு விழா 1.7.1973 அன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சாதிக்பாட்சா தலைமை தாங்க அமைச்சர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், சென்னை நகரில் உள்ள பாலங்களுக்கு தலைவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என்று அறிவித்தார். அதுபற்றி அவர் கூறியதாவது:-

சென்னை மாநகருக்கு புதிய எழில் ஊட்டும் வகையிலும், போக்குவரத்து வசதிக்கான வாய்ப்பைப் பெருக்கும் வகையிலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பேரறிஞர் அண்ணா பெயரால் அமைந்துள்ள மேம்பாலத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை.

ஏனென்றால் அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு அதை ஏன் வைக்கவேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட பாலங்கள் நம்முடைய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களுடைய பெயரால்  நம்முடைய சமு தாயத்திற்குப் புத்துணர்ச்சி ஊட்டியவர்களின் பெயரால் இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.

அந்த வகையில்தான் இன்று இந்தப் பாலத்திற்கு அறிஞர் அண்ணா பெயரை நாம் வைத்திருக்கிறோம். இந்தச் சாலையின் பெயர் அண்ணாசாலை; இந்தச் சாலையில்தான் அண்ணா சிலை இருக்கிறது. இந்தச் சாலை முடிந்த பிறகு அங்கேயிருந்து சென்றால் அண்ணா அவர்களுடைய கல்லறை இருக்கிறது. "மர்மலாங்" பாலத்தில் இருந்துதான் அண்ணா சாலை ஆரம்பமாகிறது.

மர்மலாங் என்ற பெயர்கூட ஒரு டச்சுக்காரருடைய பெயர் என்று கேள்விப்பட்டேன். மர்மலாங் பாலத்திற்கு அருகாமையில் உள்ள பல்லாவரத்தில்தான் மறைமலை அடிகளார் வாழ்ந்தார். ஆகவே மர்மலாங் பாலம் உச்சரிப்பதற்கு ஏற்ற வகையில் இனிவரும் காலத்தில் "மறைமலை அடிகளார் பாலம்" என்று மாற்றப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பெயரால் அழைக்கப்படும். வாலாஜா பாலத்திற்கு "காயிதே மில்லத்" அவர்களுடைய பெயர் வைக்கப்பட்டு, அந்தப்பாலம் காயிதே மில்லத் பாலம் என்று அழைக்கப்படும். காமராஜருடைய சிலைக்கு அருகாமையிலே இருக்கிற வெலிங்டன் பாலம் பெரியார் அவர்களுடைய பெயரால் அழைக்கப்படும்.

அதைப்போல "ஆமில்டன்" பாலத்திற்கு ஏதேதோ பல பெயர்கள் மாற்றப்பட்டதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அந்தப்பாலம் அம்பேத்கார் பாலம் என்று அழைக்கப்படும்.   பெயரில் என்ன இருக்கிறது என்று சொல்வார்கள். பெயரில் தமிழ் இருக்கிறது; தமிழ் உணர்வு இருக்கிறது; சமுதாய எழுச்சி இருக்கிறது.

சமுதாயத்திற்காக பாடுபட்டவர்களுக்கு காட்டப்படுகிற நன்றி உணர்வு இருக்கிறது. ஆகவேதான் பெயரில் என்ன இருக்கிறது என்று கேட்டால், அது விளக்கத்திற்காகக் கேட்கப்படுகிற கேள்வியே தவிர, கேலிக்காகக் கேட்கப்படுகிற கேள்வி அல்ல என்பதற்கேற்பத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம்."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.    

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் அருகே எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. "திருவள்ளுவர்" பெயரை தாங்கியுள்ள இந்த மேம்பாலம் ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்று விளங்குகிறது.

1969 ம் ஆண்டு அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியால் இந்த மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 1973 ம் ஆண்டில் ரூ.47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13 ந்தேதி கருணாநிதி மேம்பாலத்தை திறந்து வைத்தார். 706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.

ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000 வது ஆண்டில் ரூ.1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.

Wednesday, April 11, 2012

சென்னையில் நில அதிர்வு


 கா நிகழ்வுகளை உடனே தெரிவிப்பது ஊடகத்தின் கடமையாகும்
இதோ இன்றைய பதிவு

சென்னையில் நில அதிர்வு
April 11, 2012        

 
சென்னை: இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா கடலில் பிற்பகல் 2 மணி, 8 நிமிடத்திற்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5, வடக்கு இந்திய கடலில் மாலை 2 மணி, 31 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.7, வடமேற்கு சுமத்ரா கடலில் மாலை 4 மணி, 13 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.01 பதிவாகியது. மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், தமிழகம் முழுவதும் பிற்பகல் 2.15 மணி முதல் நிலஅதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில், 10 மாடி உயரத்திற்கு மிகாமல் கட்டடங்களில் பணி புரிந்த சோழிங்கநல்லூர், கிண்டி, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், எழிலகம், அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அதிகளவில் நில அதிர்வுகளை உணர்ந்தனர். மேஜை, நாற்காலிகள் ஆடியதைத் தொடர்ந்து அலறியடித்து சாலைக்கு ஓடி வந்தனர். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் அடுக்கு மாடி வீடுகளில் வசித்த பொதுமக்கள், சாப்பிடுவதை விட்டு விட்டு குழந்தைகளுடன் சாலையில் குவிந்தனர். அடுக்கு மாடிகளில் வீடுகளிலிருந்த பொருட்கள், பாத்திரங்கள் உருண்டதாக தகவல் தெரிவித்தனர்.

பள்ளிக்கு விடுமுறை : நில அதிர்வை அடுத்து, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு, பெற்றோர் படையெடுத்தனர். அங்கு, தங்கள் குழந்தைகளை அழைப்பதற்காக குவிந்தனர். இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பல இடங்களில் பள்ளியிலிருந்து குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்ததை காண முடிந்தது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், பள்ளிகளிலும், சமுதாயக்கூடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை : எண்ணூர், காசிமேடு, திருவொற்றியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் வசிக்கும் மீனவர் சங்க நிர்வாகிகளை போலீசார் அழைத்து, நில அதிர்வு ஏற்பட்டது குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். மேலும், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து, பாதுகாப்பாக இருக்கின்றனரா? கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவக் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

மெரீனா கடற்கரை : சென்னை மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் நேற்று பிற்பகலில் ஏராளமானோர் குவிந்திருந்தனர். இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்ததும், கடற்கரையிலிருந்து காற்று வாங்க வந்தவர்கள், உடனடியாக கடற்கரையை விட்டு வெளியேறினர். மேலும், அங்கு பொது மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் போலீஸ் குவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி, கடற்கரையிலிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். கடற்கரையோரப் பகுதியிலிருந்த வாகனங்களையும் எடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

தாக்கம் ஒரு வாரம் நீடிக்கும் : சென்னை வானிலை நிலநடுக்கப் பிரிவு இயக்குனர் கோபால் கூறுகையில், "நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், இந்தோனேஷியா, வடக்கு சுமத்ரா கடலில் பிற்பகல் 2 மணி, 8 நிமிடத்திற்கு நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 8.5, வடக்கு இந்திய கடலில் மாலை 2 மணி, 31 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.7, வடமேற்கு சுமத்ரா கடலில் மாலை 4 மணி, 13 நிமிடத்திற்கு ரிக்டர் அளவில் 8.01 பதிவாகியது.
இதனால், தமிழகம் முழுவதும் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் அதிகளவு உணரப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை குறித்து, தனித் துறை தான் அறிவிக்கும். இந்த நில அதிர்வு ஒரு வாரம் நீடிக்கும்' என்றார்.

 
நன்றி: தினமலர், தினதந்தி நாளிதழ்கள்

Tuesday, April 3, 2012

புரூஸ் லீ



புரூஸ் லீ என்று பிரபலமாக அறியப்பட்ட புரூஸ் ஜுன் ஃபேன் லீ (நவம்பர் 27, 1940 - ஜூலை 20 1973) அமெரிக்காவில் பிறந்த குங்ஃபூ விங் சுன் என்ற தற்காப்புக்கலை நிபுணரும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும் ஆவார். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்தவர். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது திரைப்படங்கள் காரணமாக மேற்கு நாடுகளில் சீனத் தற்பாதுகாப்புக்கலை தொடர்பில் அதீத ஆர்வம் ஏற்படமை குறிப்பிடத்தக்கது.


வாழ்க்கை

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.
புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.
1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.
புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.
புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.
1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.

நடிகராக

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அவர் அமெரிக்காவில் இருந்தபோது தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’ , 'ஹியர் கம் த பிரைடுசுஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சாசாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.
கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.
இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.
புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.
இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.
அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

மரணம்

ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

ஜீட் குன் டோ

கராத்தே கலையுடன் சில நுணுக்கங்களை சேர்த்து புரூஸ் லீ உருவாக்கிய புதிய தற்காப்பு கலை அவரது பெயரிலேயே 'புரூஸ் லீ குங்பூ' என அழைக்கப்பட்டது. இதனை தத்தவப் பாடத்துடன் சேர்த்து 'ஜே கேடி' எனும் புதிய பயிற்சியை அறிமுகப்படுத்தினார். இதனை பயிற்றுவிக்க பல பள்ளிகளையும் திறந்தார்.

உடற்பயிற்சி

புரூஸ் லீ உடம்பை பேணிய விதம் அலாதியானது. காலை ஏழு மணி முதல் ஒன்பது மணி வரை வயிறு மற்று தசைகளுக்கான பயிற்சி. பிறகு எடை பயிற்சி மற்றும் சைக்கிளிங். புரூஸ் லீ விரும்பி செய்த மற்றொரு பயிற்சி ஓடுவது. ஐந்து முதல் ஆறு மைல்கள் அதி வேகமாக ஓடிக்கொண்டே ஐந்து நிமிடத்துக்கொருமுறை வேகத்தை மாற்றிக் கொள்வது.
புரூஸ் லீ உடல் உறுதி சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கான புத்தகங்களை சேகரித்து வைத்திருந்தார். பிரத்யேகமா செய்த உணவுகளையே அவர் பெரும்பாலும் எடுத்துக் கொண்டார். ஒருவர் உள்ளங்கையை மூடி திறப்பதற்குள் அவரது கையை தாக்கும் அளவுக்கு வேகம் புரூஸ் லீயிடம் இருந்தது. ஒரு கையின் சுண்டுவிரல் மற்றும் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி தண்டால் எடுக்கும் அளவுக்கு விரல்களை உறுதிப்படுத்தி வைத்திருந்தது இன்னொரு ஆச்சரியம்.

சிலை

திரையில் இத்தனை ஆக்ரோஜமாக இத்தனை உண்மையாக நிகழ்த்தி காட்டிவர்கள் புரூஸ் லீக்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ஹாங்காங் அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது முழு உருவ வெண்கல சிலையை 46 லட்சம் செலவில் நிறுவியது. டைம்ஸ் பத்திரிகை சென்ற நூற்றாண்டின் சமூகத்தை பாதித்த சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் புரூஸ் லீயையும் சேர்த்துள்ளது.

நடித்துள்ள திரைப்படங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms