ஏன்’யா முத்துசாமி! உன்னிடம் நான் கடன்
வாங்கியது எப்போது?”
-
“ஒரு மாதத்துக்கு முன்னே”.
-
“எப்போது தருவதாகச் சொன்னேன்?”
-
“இருபது நாளில்”.
-
“கெடு தாண்டிவிட்டதா இல்லையா?”
-
“ஆமாம்”.
-
”பின்னே ஏன்’யா வந்து கேட்கவில்லை?”
-
“நீங்களே வந்து தருவீர்கள் என்று இருந்து விட்டேன்”.
-
“நன்றாக இருக்கிறதே! வாங்குவதற்கும் நான் வர
வேண்டும்; கொடுப்பதற்கும் உன்னைத் தேடி வந்து
நான் அலைய வேண்டுமா?”
-
“மன்னியுங்கள். எங்கே ஓடிப் போய்விடப் போகிறீர்கள்
என்று நினைத்தேன்”.
-
”நான் ஓட மாட்டேன் என்பதற்கு என்னய்யா உறுதி?”
-
“உறுதியில்லைதான். அப்படி நான் எவ்வளவு தந்து
விட்டேன்? ஆயிரமா,
பத்தாயிரமா? இருநூறு தானே?”
-
“இருநூறு உனக்குக் கேவலமாகத் தெரிகிறதா?
இருநூறு வாங்கின நான்
கேவலமானவன் என்று குத்திக்
காட்டுகிறாயா?”
-
“ஐயையோ! அப்படியில்லை. பணம் வந்ததும் தூக்கி
எறிந்து விடுவீர்கள் என்று
எதிர்பார்த்தேன்.”
-
“என்னது?
எறிகிறதா? பணத்தை மதிக்க வேண்டுமய்யா.
‘பொருள்தனைப் போற்றி வாழ்’ என்று
ஒளவையார்
சொன்னதைப் படித்ததில்லையா?”
-
“நீங்கள் சொல்வது சரிதான். நானே வந்து வாங்கிக்
கொள்வேன்”.
-
“எப்போது?”
-
“நாளைக் காலையிலே”.
-
“கண்டிப்பாக வர வேண்டும். டிமிக்கி கொடுத்தால்
நான் பொல்லாதவன் ஆகிவிடுவேன்.”
-
“கோபிக்காதீங்க. நிச்சயமாக வருவேன்.”
-
“வார்த்தை தவற மாட்டாயே?”
-
“மாட்டேன்.”
-
“ஜாக்கிரதை! காத்திருப்பேன்!”
-
---------------------------------------
> சொ.ஞானசம்பந்தன் (ஆனந்த விகடன், -ஒருநிமிடக் கதை, )

3 கருத்துரைகள்:
இப்படியும் ஆள் இருக்கிறார்களா?
நல்ல காத்திருப்பு.
கடனும் கொடுக்கலும் வாங்கலும்...
உலகம் பலவிதம்.
Post a Comment