வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Wednesday, January 11, 2017

போகி -பொங்கல் -மாட்டுப் பொங்கல்

போகி பண்டிகை என்பது மார்கழிமாதம் முடிந்து தைமாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம். முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். 

அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது. போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. 
முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை.  எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. 
பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது அவசியமல்லவா? எனவேதான் போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.


உழவர் திருநாள்!
இந்தப் பொங்கல் திருநாள் மிகவும் முக்கியமான ஒரு நாள். இது அறுவடைத் திருநாள் என்பதால் நம் கலாச்சாரத்தில் இந்நாள் மிக முக்கியமான இடம் வகித்தது. சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள் வளரவேண்டும் என்றாலோ, மனிதனின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும் அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில் சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் பொருளோ, மனிதனோ வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியும் பெருகும். வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும். 
உணவை ஒரு பொருளாக நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அது நமது உயிர், வாழ்தலுக்கான இன்றியமையாத சக்தியாகும். உணவு கிடைக்காதபோதுதான் நமக்கு இந்த உண்மை புரியும். எனவே உணவு உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும் காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து அர்ப்பணம் செய்ய விரும்புகிறோம். குறிப்பாக விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள் இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதால் அதை சூரியனுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது. 
நாம் உண்ணும் உணவு உயிருக்கு ஊட்டம் வழங்குவதால் அதற்கு காரணமான மண்ணுக்கு, உணவைக் கொடுக்கின்ற விவசாயிக்கு, அதை சமைத்து வழங்கும் தாய்மார்களுக்கு, உற்பத்திக்கு உதவியாக இருக்கின்ற கால்நடைகள் குறிப்பாக மாடுகளுக்கு, மேலும் சுற்றுச் சூழலுக்கு அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற சூரியனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பதை உணர்த்துவதுதான் பொங்கல் கொண்டாட்டம். வாழ்க்கையில் கண நேரமாவது நாம் நன்றி உணர்வைக் கொண்டு வந்தால் வாழ்க்கையின் அடிப்படையிலேயே மாற்றம் கொண்டுவர முடியும். போகிப் பண்டிகை பொங்கல் திருநாள், மாட்டுப் பொங்கல் ஆகிய திருவிழாக்கள் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. பிற மாநிலங்களில் மகர சங்கராந்தி என்றழைக்கப்படும் தை முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுவதால் இதைத் தமிழர் திருநாள்என்றும் விவசாயக் குடும்பங்களில் இந்நாளை அறுவடைத் திருநாள் என்று கொண்டாடப்படுவதால் உழவர் திருநாள்என்றும் அழைக்கிறோம்.

அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
print this in PDF Print Friendly and PDF

Tuesday, January 10, 2017

புத்தகக் கண்காட்சி 2017

புத்தகக் கண்காட்சி 2017                                                                
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவையொட்டி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 40வது புத்தக கண்காட்சி 06.01.2017 முதல் 19.01.2017ம் தேதி வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப் பள்ளியில் இந்த கண்காட்சி நடக்கிறது.


தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வெளியிடும் பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ள இந்தப் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் 350 தமிழ் புத்தக பதிப்பகங்களும், 153 ஆங்கிலப் புத்தக பதிப்பகங்களும் இடம்பெற்றுள்ளன. 10 லட்சம் புதிய தலைப்புகள் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சிக்குள் நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தினம் வரும் வாசகர்களின் வசதிக்காக 50 மற்றும் 100 ரூபாய்க்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. 50 ரூபாய் சீசன் டிக்கெட் பெறும் வாசகர்கள் கண்காட்சி முடியும் வரை தினமும் வந்து செல்லலாம். 100 ரூபாய் சீசன் டிக்கெட் பெறுவோர் 4 பேர் கொண்ட குழுவாக தினமும் வரலாம்.

இந்தக் கண்காட்சியை கல்வி அமைச்சர் மா.பா பாண்டியராஜன் 06.01.2017 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக நூலகங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

புத்தகக் கண்காட்சி வெறும் பார்வைக்காக அல்ல,வாங்கி படிக்கவும் தான். புத்தக வாசிப்பை வளர்ப்போம்.சிந்தனையை வளமாக்குவோம்.

A book is a device to ignite the imagination.

–Alan Bennett
print this in PDF Print Friendly and PDF

Tuesday, December 20, 2016

குளிர்கால மழைக்கால காய்ச்சலை தவிர்ப்பது எப்படி?

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க... எல்லா பக்கமும் `டெங்குவாம், `சிக்குன்குனியாவாம்... ஏதோ மர்மக் காய்ச்சலாம்!எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா... என விதவிதமான பரிந்துரைகள். 

காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா?


* காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக் கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா, வைரஸ்களுக்கு எதிரான யுத்தம் எனில், ஜுரம் நீடிக்கலாம். உடலில் வெள்ளை அணுக்கள் - கிருமிகளுக்கு இடையிலான யுத்தத்தில் ரத்தத் தட்டுக் குறைவு, உடல் நீர்ச்சத்துக் குறைவு, ஈரல்-மண்ணீரல் வீக்கம் எனத் தொந்தரவுகள் அதிகரிக்கும். அதுவே உடலின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து, சுகவீனத்தை (ஜுரத்தை) உண்டாக்கும். 

* இனிப்பு, பால், நீர்க்காய்கறிகளைத் தவிருங்கள். மருத்துவர் பால் அருந்தச் சொல்லியிருந்தால், அதில் மிளகு, மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து, காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் மட்டும் அருந்துங்கள். இரவிலும் அதிகாலையிலும் வேண்டாம்! 

* ஆவி பிடித்தல், நெற்றிக்குப் பற்று இடுவது, சுக்கு-மல்லிக் கஷாயம் அருந்துதல்... என வாரம் ஒரு நாள் கண்டிப்பாகச் செய்யுங்கள். சூடான தேங்காய் எண்ணெயில் கற்பூரம் கலந்து தயாரிக்கப்படும் கற்பூராதி தைலத்தை, குழந்தைகளுக்கு நெஞ்சில் தடவிவிடுங்கள். 
*  மிளகு, மஞ்சள், லவங்கப்பட்டை, கிராம்பு, கொள்ளுப் பயறு, நாட்டுக்கோழி முதலான, உடலுக்கு வெம்மை தரும் உணவுகளை அவ்வப்போது சேர்த்துக்கொள்வது நல்லது. 

* காலையில் கரிசாலை முசுமுசுக்கை இலை போட்ட தேநீர், மதியம் தூதுவளை மிளகு ரசம், மாலையில் துளசி பச்சைத் தேயிலை தேநீர்... இவை மழைக்கால நோய் எதிர்ப்பு உணவுகள். 

* ரத்தத் தட்டுக்களை உயர்த்த, சளியை வெளியேற்ற, இருமலை நீக்க, இரைப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகச் சிறந்த மருந்து ஆடுதொடா இலைச்சாறு. மருத்துவர் ஆலோசனையுடன், சரியான இலைதானா என உறுதிப்படுத்திக்கொண்டு ஓரிரு இலையை அரைத்து, சாறு எடுத்து, மழைக்காலத்து சளி காய்ச்சலை எளிதில் போக்கலாம். 

* இரு சக்கர வாகனத்தின் முன்புறத்தில் குழந்தைகளை அமர்த்தி, மாலை, இரவு நேரங்களில் பயணம் செய்யாதீர்கள். வாடைக் காற்று தாக்காமல் காதுகளைக் கவனமாக மூடிக்கொள்வது நல்லது! 

ஆனந்த விகடனில் மருத்துவர் கு.சிவராமன் 
Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Monday, December 19, 2016

வர்தா புயலால் நாம் கற்றுக்கொண்ட பாடம்!

அண்மையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட 'வர்தா' புயல் தாக்கத்தினால், மரங்கள் வேரோடு சாய்ந்தன.


நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் ஒன்றுகூட விழாமல் வெளிநாட்டு மரங்கள் மட்டுமே விழுந்தன.அவைகளை அகற்ற முடியாமல் குப்பை குளமாய் மாறி சென்னையே அழுக்காய் ஆனது. இது ஒருபுறம் இருந்தாலும் உயிர்பலி சேதாரம் முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிதும் தவிர்க்கப் பட்டது.

'வர்தா' புயலால் வீதியில் சாய்ந்த மரங்களை முற்றிலுமாக அகற்றும் அளவுக்கு, போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், காவல் துறையினருடன் தன்னார்வ தொண்டர்களும் விடியவிடிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்தப் பகுதி இளைஞர்களே நேரடியாகக் களத்தில் இறங்கி மரங்களை அகற்றிய இளைஞர்கள் பலரும், "நம்ம ஊரு அரச மரமும், வேப்ப மரமும் சாயவே இல்லைங்க. விழுந்து கிடந்தது எல்லாமே வெளிநாட்டு மரங்கள்தான்" என்று சொல்லிச் சொல்லி வியக்கின்றனர். அந்த இளைஞர்களின் வியப்பே சமூக ஊடகங்களிலும் பரவி மிகவும் வைரலானது. பெருங்கொன்றை, தைல மரம், இயல்வாகை, சவுக்கு, கருவேலம் போன்ற மரங்களின் வீழ்ச்சியையும் அவர்கள் அதிகளவு கண்டுள்ளனர்.

அம்மரங்களில் ஒன்றுகூட நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் இல்லை' என்ற செய்தி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் நம்மூர் உள்நாட்டு மரங்களுக்கு என்றுமே தனிமவுசு உண்டு என்பது தெளிவாகியுள்ளது.

வர்தா புயலால், உள்நாட்டு மரங்கள் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. எந்தப் புயலையும் எதிர்கொண்டு கம்பீரத்துடன் நம்மூர் மரங்கள் நிற்பதைப் பார்க்கும்போது, சொந்த மண்ணில் நம் பலமே தனிதான் என்பதை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. இந்த உண்மையை மனிதர்களுக்கு முன்பே பறவைகள் கற்றுக் கொண்டன எனலாம். அதன் காரணமாகவே, நம்மூர் மரங்களில் மட்டுமே பறவைகள் கூடுகட்டி வசித்து வந்துள்ளன. இயற்கையோடு பின்னிப் பிணைந்த வாழ்வைக் கொண்டுள்ள பறவைகளும், அவற்றின் கூடுகளும் 'வர்தாவின்' கோரப்பிடியில் பாதிப்பின்றி பாதுகாக்கப்பட்டுள்ளன. பறவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்பதோடு, அவற்றின் கூடுகளில் இருந்த வாரிசுகளும் தப்பித்துள்ளன.

மரங்கள், நிலச்சரிவைக் கட்டுப்படுத்தி, மண் அரிப்பைத் தடுக்கின்றன. கரியமில வாயுவை நிர்ணயம் செய்யும்தன்மை மரங்களுக்கு உண்டு. புவியின் தட்பவெப்பநிலையை நிர்ணயிக்கும் காரணிகளாக காடுகள் உள்ளன. இந்தியாவில் 33 சதவீதம் அளவுக்கு இருந்த காடுகளின் பரப்பளவு மெல்ல குறைந்து, தற்போது 22 சதவீதமாகியுள்ளது. ஏற்கனவே குறைந்துள்ள 11 சதவீதத்தை மீண்டும் எட்டவேண்டுமானால், சுமார் 54 கோடி மரங்களை நட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காடுகள் அழிவால் கடல்நீர் மட்டம் உயர்வு, புவி வெப்பமயமாதல் அதிகரித்தல் ஏற்படுகிறது. ஒரு சில இடங்களிலும் அதிக மழையும், வேறு சில இடங்களிலும் மிகுந்த வறட்சியும் ஏற்பட காடுகளின் சமநிலையின்மை காரணமாக அமைந்து விடுகிறது.

கடலோரங்களில் மரங்கள் வளர்க்கப்படுவதால், இயற்கைப் பேரிடர் ஏற்படும் நேரங்களில் அந்த மரங்கள் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, பெரிய அளவில் சேதம் ஏற்படாமல் தடுக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு ஈடாக புதிதாக மரங்கள் நடப்படுகின்றனவா என்றால், இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக அமையும். அப்படியே மரங்கள் நடப்பட்டாலும், அவை முழுமையாகப் பராமரிக்கபடாமல் விடப்படுகின்றன.

எனவே. இந்த புயலின் தாக்குதலில் இருந்து நாம்  பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!.இனி பாரம்பரிய தாய் மண் மரங்களை வளர்ப்போம். இயற்கையை காப்போம்



 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !

பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...
                               
         
இஞ்சி
நாட்டுவைத்தியத்தில் இஞ்சியின் பயன்பாடு மிக முக்கியமானது. நம் முன்னோர்கள் சளித் தொந்தரவில் இருந்து மூலநோய் வரைக்கும் இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இஞ்சியை அப்படியே ஃபிரெஷ்ஷாகவோ பௌடராகவோகூடப் பயன்படுத்தலாம். சமைக்கும்போது மட்டும், அளவில் கவனம் தேவை. ஒரு டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி என்பது, 1/8 டீஸ்பூன் இஞ்சி பௌடருக்குச் சமம். சமையலில் இஞ்சி சேர்ப்பது சுவையைக் கூட்டும்; சமைத்த பொருள் சீக்கிரம் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும்; ஆரோக்கியத்துக்கு உதவும்; குடல், வயிறு ஆகியவற்றைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும்.
                                       

மஞ்சள்
உணவின் நிறத்துக்காகப் பயன்படுகிறது என நாம் நினைக்கும் மஞ்சள் மகத்தானது. மஞ்சளில் இருக்கும் மஞ்சள் நிறம் அபாரமாகச் செயல்புரியும் தன்மை கொண்டது. இது, ஆன்டிஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. குர்குமின் (Curcumin) என்ற சத்து, புற்றுநோய் வளராமல் பாதுகாக்கிறது. தினமும் கால் டீஸ்பூன் அளவு உணவில் சேர்த்து கொள்வது நல்லது. குடல், ப்ராஸ்டேட், மார்பகம் மற்றும் தோல் தொடர்பான புற்றுநோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.
                                           

சிவப்பு மிளகாய்
நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் சிவப்பு மிளகாயேதான்... அதன் ஆற்றலோ அபாரம். இதில் இருக்கும் காரத்தன்மையில் உள்ள சேர்மானம் வலியில் இருந்து நிவாரணம் தரக்கூடியது; தோலுக்குப் பாதுகாப்பு தரக்கூடியது; செரிமானக்கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. சிவப்பு மிளகாயை அளவோடு சமையலில் சேர்த்துக்கொள்வது தோல் தொடர்பான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
                                                       

பூண்டு
மருத்துவக் குணம் கொண்ட பூண்டு உடலில் சேரும் நச்சுக்களை முறிக்க வல்லது. இதை, அன்றாடம் சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டில் இருக்கும் சல்ஃபர், ஆர்ஜினைன், ஃப்ளேவனாய்ட்ஸ் மற்றும் செலினியம் எல்லாமே உடல் ஆரோக்கியத்துக்கு உதவுபவை. பூண்டை நசுக்கும்போது அதிலிருந்து கிளம்பும் மணத்துக்குக் காரணம், பூண்டில் இருக்கும் ஆலிசின் (Allicin) என்ற சேர்மானம்தான். பூண்டு உடலில் சேரும் கொழுப்பைத் தடுக்க உதவுகிறது. மார்பகம், குடல், வயிறு, உணவுக்குழாய், கணையம் ஆகியவற்றில் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. லுகூமியாஎனும் ரத்தப் புற்றுச் செல்களை அழிப்பதில் துணைபுரிகிறது. பூண்டுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ஆற்றலும் உண்டு.
                                                      

புதினா
பல நூற்றாண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் புதினா ஓர் அருமருந்து. வாயுக்கோளாறு, செரிமானமின்மை, முதுகுப்பிடிப்பு, மூட்டுவலி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இர்ரிடபிள் பௌல் சிண்ட்ரோம் மற்றும் ஃபுட் பாய்ஸன் போன்ற பிரச்னைகளின்போது உதவக்கூடியது. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் புதினாவுக்கு உண்டு.

 Email :sanakrarrow@gmail.com Print Friendly and PDF

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms