ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த செப்டம்பர் மாதம்
9-ந் தேதி 43 உப சன்னதிகள், 11 கோபுரங்களுக்கு முதல்கட்ட கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து மூலவர்
ரெங்கநாதர், தாயார் உள்பட 5
முக்கிய சன்னதிகள், 236 அடி உயர ராஜகோபுரம் உள்பட 10 பிரதான கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம்
நேற்று (18.11.2015) நடைபெற்றது.
இதையொட்டி ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலின் அனைத்து கோபுரங்கள், சன்னதி விமானங்கள் எல்லாம் மின்னொளியில் ஜொலித்தன.
நேற்று 8.30 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டன. புனித நீர் நிரப்பப்பட்ட வெள்ளிக்குடங்களை தலையில் சுமந்தபடி பட்டாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க 5 சன்னதி விமானங்களுக்கும், 10 கோபுரங்களுக்கும் புறப்பட்டனர்.
காலை 8.45 மணிக்கு மேள தாளங்கள் முழங்க, அரையர்கள் அபிநயத்துடன் பாசுரங்களை பாடியபடி முன்னே வர பெரிய பெருமாள் என போற்றப்படும் மூலவர் ரெங்கநாதர் சன்னதியின் மேல் தளத்தில் உள்ள தங்க விமானம் அருகில் பட்டாச்சாரியார்கள் வந்தனர். இதனை தொடர்ந்து தங்க விமானத்தின் பாதுகாப்பு கடவுளான பரவாசுதேவருக்கு தீபாராதனை காட்டி பட்டர்கள் பூஜை செய்தனர்.
அதே நேரம் ராஜகோபுரம் உள்பட 10 கோபுரங்கள், மற்ற சன்னதிகளின் மேல் தளங்களிலும் பட்டாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய குடங்களுடன் தயார் நிலையில் நின்று கொண்டு இருந்தனர்.
சரியாக 9.30 மணிக்கு வாணவெடிகள் போடப்பட்டன. அப்போது அமைச்சர் காமராஜ் தனது கையில் வைத்து இருந்த பச்சை கொடியை அனைத்து கோபுரங்களிலும் நின்று கொண்டிருந்த பட்டர்களுக்கு தெரியும்படி அசைத்தார்.
இதனை தொடர்ந்து தங்க விமானத்தில் இருந்த 4 கலசங்களிலும் பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினார்கள். இதே போல் ராஜகோபுரம் உள்பட 10 கோபுர கலசங்கள், மற்ற 4 சன்னதி விமான கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷத்துடன் வழிபட்டனர்.
சன்னதி விமானங்கள், கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட பின்னர் பட்டாச்சாரியார்கள் அந்தந்த சன்னதிகளுக்கு சென்றனர். மூலவர் ரெங்கநாதருக்கு தங்க குடத்தில் புனித நீர் கொண்டு வரப்பட்டு மங்கள ஆரத்தி பூஜை நடத்தப்பட்டது. இதேபோல் தாயார், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், ராமானுஜர் சன்னதிகளிலும் மங்கள ஆரத்தி பூஜை நடத்தப்பட்டது. கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது.
தமிழக கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, அரசு தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.ஏ , திருச்சி மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்டனர்.
நன்றி : தினந்தந்தி - படங்கள் : விகடன்.காம்
5 கருத்துரைகள்:
மிகப் பிரமாண்டமான படங்கள் தகவல்கள் ஐயா.
கோவில் வாசலுக்குள் நுழையும் சனக் குவியலும்
தேங்காய் முடி போன்ற 6- 12 படங:களும் ஏன் எல்லாமே கவர்ந்தனஇ
மிக்க நன்றி ஐயா.
உங்களது பதிவின்வழி குடமுழுக்கினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். நன்றி.
மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் கோயில்களைப் பற்றி ஒவ்வொன்றாக எழுதி வருகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது வாருங்கள்.
@Dr B Jambulingamஉங்கள் கட்டுரைகளை பார்த்த பின் தான் நான் கோவில்களை பற்றி எழுத ஆரம்பித்தேன்.நன்றி
சிறப்பான படங்களுடன் கும்பாபிஷேக தரிசனம் கண்டேன்! நன்றி!
எனது பதிவுகளைக் கண்டு தாங்கள் கோயில்களைப் பற்றி எழுத ஆரம்பித்தமையறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
Post a Comment