Friday, February 26, 2016

பயணமும் நீராடலும் பாகம்-01

வரவேற்பு முகமாய் என் மனைவி புன்னைகையுடன் என்னை வரவேற்றாள். சீக்கிரம் போய் குளிச்சுட்டு வாங்கஎன மாலை 3 மணிக்கே அன்பு கட்டளையிட்டாள் . நான் என் மனைவி மற்றும் இருமகன்கள் உள்பட கும்பகோணம் மகாமக தீர்த்தவாரி திருவிழா செல்வதற்காக சனிகிழமையன்று (20.02.2016) தயாரானோம். ஆளுக்கொரு சுமையாக நான்கு பைகள் என எங்கள் அனைவருக்கும் தேவையான உடை, கொறிக்க கொஞ்சமாய் நொறுக்குத்தீனி மற்றும் பல இத்யாதிகளுடன் நேற்றிரவு முதலாய் தயாராக இருந்தது. ஐந்தாவதாக ஒரு கட்டைப்பிடி  பையில் தண்ணீர் பாட்டில்கள், தீர்த்தம் பிடிக்க ஐந்து லிட்டர் கேன் ஒன்று,(என் தெருவிலுள்ள பிள்ளையார் கோயிலுக்காக) இரவு உணவு,கை துடைக்க ஒரு டவல் மற்றும் போன் சார்ஜர்கள்,பவர் பேங்குகள் உடன் இப்போது தயாராகி இருந்தது.


கோயம்பேடு பஸ் நிறுத்ததிலிருந்து மாலை 4.35க்கு தமிழ்நாடு விரைவு பேருந்து கிளம்பி எங்கள் திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை பஸ் நிறுத்ததிற்கு வர மாலை 5.35க்கு ஆகும் என கணக்கிட்டு (முன்பதிவு செய்த சீட்டில் உள்ளபடி) ஐந்து மணியளவில் குடும்ப சகிதாமாய் பஸ் நிறுத்ததில் வந்து நின்றோம். பஸ் நிறுத்ததில் மேற்கிலிருந்து மாலை சூரியனின் வெயில் சுட சற்று  வேர்த்து நின்றோம். பாண்டிச்சேரி, சிதம்பரம்,மயிலாடுதுறை நாகப்பட்டினம் செல்லும் பேருந்துக்கள் மட்டும் விரைவாய் வந்து எங்களை கொஞ்சம் நோகடித்தது.நேரம்  5.35-ஐ கடந்தது. ஆனால் எங்கள் பேருந்து மட்டும் வரவில்லை. எங்களது சின்ன மகன் மட்டும் கொஞ்சம் சலித்துக்கொண்டே இருந்தான்.

நான் என் மனைவியிடம் நான் அப்பவே சொன்னேன் நம் காரிலேயே கிளம்பியிருந்தால் இந்நேரம் பாண்டி தாண்டி இருக்கலாம் என்றேன். உடனே என் மனைவி ஒரு மாறுதலுக்கு பஸ்லே போலாம்னு தானே பஸ் புக் பண்ணோம் கொஞ்சம் பொறுமையா இருங்க என என்னை அதட்டியது போலே எங்களது  சின்ன மகனை தேற்றினாள். மணி ஆறு ஆனது. என் மூத்த மகன் எஸ்.இ.டீ.சி(SETC) மட்டும் சொன்ன நேரத்துலே வந்ததா சரித்திரமே இல்லே என அவன் பங்களிப்பில் கருத்துரையிட்டான்.

மணி 6-05 ஐ தாண்டியது.வாகன நெரிசலில் தவழ்ந்து எங்கள் 307E அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து வந்தது வேகமாக பேருந்துக்குள் ஏறி பைகளை எங்களது இருக்கைகளுக்கு மேல்தட்டில் பைகளை பத்திரப்படுத்தி எங்களது இருக்கைகளில் அமர்ந்தோம்.என் மனைவியின் கால்கீழே கட்டைப்பிடி  பையை பத்திரப்படுத்திக் கொண்டாள். பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் நகர்ந்துக் கொண்டு இருந்தது.

சிறிது தூர ஓட்டத்திற்கு பிறகு அரசு அங்கீகாரம் பெற்ற பயணவழி உணவகம் ஹோட்டல் கவுரி கூவத்தூர் என்ற பெயர் பலகையுடன் வரவேற்ற சிறிய உணவகத்தின் முன் எங்கள் பேருந்து நின்றது. மணி எட்டானது.என் குடும்பம் மற்றும் வேறு  இரு குடும்பங்கள் தவிர மற்ற சக பயணிகள் கீழே இறங்கினர். என் மனைவி கட்டைப்பிடி  பையை எடுத்து கட்டிக்கொண்டு வந்த இட்லி, தக்காளி சட்னி பொட்டலம் ஆளுக்கொன்றாய் கொடுத்தாள்.எங்களை போலவே அந்த இருகுடும்பங்களும் உணவை பரிமாறி சாப்பிட ஆரம்பித்தனர். இரவு உணவு முடிந்தது மீண்டும் பேருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்தது.

வழியில் மைத்துனரின் அலைபேசி விசாரிப்பு மாமா எங்கே இருக்கீங்க.சகலைகளின் அலைபேசி அழைப்பு என எங்களை சுறுசுறுப்பாகியது. என் அலைபேசி, என் மனைவியின் அலைபேசி, என் மகன்களின் அலைபேசி என எல்லாமே மாறிமாறி சுறுசுறுப் பாக்க  வளைவு,பள்ளம்,குலுங்கல்,வாகன இரைச்சல் என இருக்க அல்ட்ரா டீலக்ஸ் மட்டும்  மெல்லமாய்  கடந்துக்கொண்டிருந்தது. பாண்டிச்சேரி,கடலூர்,சிதம்பரம்,வைத்தீஸ்வரன் கோயில்,மயிலாடு துறை, ஆடுதுறை, திருபுவனம், திருவிடைமருதூர் என கடந்து கும்பகோணத்திற்கு ஐந்து கிலோமீட்டர் முன்னேயே அசூர் எனும் ஊரில் மகாமக விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   தற்காலிக சென்னை மார்க்க பேருந்து நிலையத்தில் எங்களை இறக்கியது. 1992-ல் மகாமகத்திற்க்கு நான் என் அம்மா,அப்பா மற்றும் என் மனைவியுடன் வந்திருந்தேன். அப்போது என் மனைவி கருவுற்று இருந்தாள். சென்னை மார்க்க பேருந்துகள் கொரநாட்டு கருப்பூரோடு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. 2004-ல் கும்பகோண புதுபேருந்து நிலையத்தோடு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. 

இருள் சூழ தீடீர் கடைகளின் வெளிச்சம்,வாகன இரைச்சல்,சென்னை செல்லும் பேருந்தின் அழைப்பு, நிறைய போலீஸ்,கொஞ்சம் ஊர் தெரிய நாங்கள் கும்பகோணம் அடைய மாற்று வாகனத்தை எதிர்பார்க்க அருகில் வந்து நின்றது மூன்றுசக்கர வாகனம். கட்டண பேரம் எதுவும் பயனில்லை. நாங்கள் ஏறி கொண்டோம். நால் ரோடு,செட்டி மண்டபம்,மடத்து தெரு.நாகேஷ்வரன் வீதி என கடக்க வழி எங்கும் தற்காலிக ஸ்டிக்கர்கள் மகாமக குளக்கரைக்கு  வழிகாட்டி கொண்டிருந்தது. தென்னிந்திய கும்ப மேளா மகாமக தீர்த்தவாரிக்கு வருகை தரும் பக்தகோடிகளை கும்பகோண நகராட்சி வரவேற்கிறது எனும் பதாகைகள் எங்கும் வரவேற்றது. தற்காலிக மே ஐ எல்ப் யூ எனும் காவல் உதவி மைய பூத்க்கள், காக்கிசட்டைகளின் வயர்லஸ் கரகர ஒலி , மகாமக குளத்திற்கு செல்லும் வழி எனும் அட்டைகள், பக்தர்களின் நடைவேகம், ஆங்காங்கே பிளாஸ்டிக் குளியல் மக்,கேன் என சிறு நடைபாதை வியாபாரிகளின் வியாபார அழைப்பு,டீக்கடையில் வானொலி பாடல்கள்.கொஞ்சம் பக்தி பாடல்களின் ஒலி,ஆட்டோக்களின் வேகம் என கும்பகோணம் தாறுமாறாக முழித்துக்கொண்டு இருக்க, அவர வர்களின் குறி நீராட மகாமக குளத்திற்க்கு செல்ல,ஒருவழி பாதை ஆரவாரமாக இருந்தது..

எங்கள் ஆட்டோவும் பெரிய கடை தெருவின் ஒர் இடத்தில் நிற்க நாங்கள் இறங்கி எங்கள் பயண முடிச்சுகளுடன் மகாமக குள வழிப் பாதையில்  காசி விஸ்வநாதன் தெருவில் உள்ள  என் சகலைகளின் வீட்டை நோக்கி நடந்தோம்.அடைந்தோம்.  மணி அதிகாலை இரண்டாகியது.

கொஞ்சம் தூங்கி எழுந்த போது மணி ஏழாகி இருந்தது.குளித்து முடித்து வெளியே வந்த போது தெருவில் தாரைத் தாரையாக மக்கள் மகாமக குளம் நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர்.

மகாமகக் குளம் சுத்தப் படுத்தியபோது

போலீஸ் மைக்கில் அன்பு பக்தகோடிகளே தள்ளாமல் ஓடாமல் மெல்ல செல்லும் படி காவல்த்துறை கேட்டுக்கொள்கிறது என்று ஒலித்துக் கொண்டிருந்தது. பெண்கள் முந்தானைகளால் கழுத்தை சுற்றி நகைகளை மறைத்துக் கொள்ளவும், குழந்தைகளை கைப்பிடித்து கூட்டிக் கொண்டு செல்லவும், வயதானவர்களை முன்னே விட்டு பின்னே பாதுகாப்போடு செல்லவும் என ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பக்த கோடிகளை வேண்டிக் கேட்டுக்கொண்டே இருந்தது. காவல் துறை மிக்க பாங்குடன் பொதுமக்களை எச்சரித்தும் பாதுகாத்தும் வழிகாட்டியும் இருபத்திநான்கு மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருந்தது மிக்க சிறப்பாக இருந்தது.எங்கு நோக்கிலும் மக்கள் வெள்ளம். வயதானவர்கள்,இளையவர்கள் குழந்தைகள் என மக்கள் வெள்ளம் வந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு தெருவிலும் ஒரு இரும்பு கதவுகளை பொருத்தி அதற்கு எண்களை இட்டு கேட் நம்பரை வைத்து அங்கிருக்கும் போலீசாரை கண்ட்ரோல் ரூமிலுருந்து அதிகாரிகள் செயல்ப்பட வைத்தனர்.கதவுகளை மூடியும் தடுத்து நிறுத்தியும் மக்களை கட்டுப்படுத்தி அனுப்பிக் கொண்டே இருந்தனர். கதவுகள் இல்லாத இடங்களில் கயிற்றால் தடுத்தும் மக்களை மகாமக குளத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தனர். மகாமக குளத்திற்கு அருகேயும் மற்றும் சில வீதிகளிலும் இலவச மருத்துவ முகாம்கள் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்து இருந்தது.அதுவும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் இலவச தற்காப்பு மருந்துக்களுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது.

நான்,என்மனைவி,என் இருமகன்கள், சகலை திரு.ரமேஷ், மைத்துனன் திரு.சுரேஷ்,இன்னொரு சகலை திரு .ரவியின் மகன்  பிரசன்னா என ஏழு பேரும் மகாமக குளத்தில் நீராட  புறப்பட்டோம்.

மகாமகக்குளத்தில் பக்தர்கள்
மகாமக குளத்தில் கிழக்கில் இருந்து பக்தர்கள் இறங்கி நீராடிக்கொண்டே மேற்கு திசையில் வெளியே அனுப்பி வைக்கப்பட்டு கொண்டே இருந்தனர். குளத்தின் உள்ளேயும் போலீஸ் மக்களை சூழ்ந்து அவர்களை கட்டுப்படுத்தி எந்தவொரு தொந்தரவுமின்றி நீராட விட்டனர்.

20 தீர்த்தங்கள் - 1.நவகன்யா தீர்த்தம், 2. இந்திர தீர்த்தம், 3.அக்னிதீர்த்தம், 4.யம தீர்த்தம், 5.நிருதி தீர்த்தம், 6.வருணதேவ தீர்த்தம், 7.வாயு தீர்த்தம், 8.பிரம்ம தீர்த்தம், 9.குபேர தீர்த்தம், 10. ஈசான தீர்த்தம், 11.மத்யே 66 கோடி தீர்த்தம், 12.கங்கா தீர்த்தம், 14.நர்மதா தீர்த்தம், 15. ஸரஸ்வதீ தீர்த்தம், 16.கோதாவரி தீர்த்தம், 17.காவேரி தீர்த்தம், 18.கன்யா தீர்த்தம், 19.பாலேஷ் (ஷீரநதி) தீர்த்தம், 20. ஸரயூநதி தீர்த்தம் என்று தீர்த்த கிணறுகளின் மேல் பதாகையில்  பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. தீர்த்த கிணறு களின் மேல் நீரை பீய்ச்ச்சடிக்கும் குழாய் பொருத்தப்பட்டு அது கிணறை சுற்றி நீராடும் பக்தர்களின் மேல் நீரை பீய்ச்ச்சடித்துக் கொண்டிருந்தது.
என் சகலையின் வீட்டு மொட்டைமாடியிலிருந்து எடுத்த போட்டோ.
வடமேற்கு மூலையில் காவிரியிலிருந்து நீர் வர வைக்கப்பட்டு தென் கிழக்கில் நீர் வெளியேற்றி குளத்தின் நீரை சுத்தமாக பராமரித்துள்ளனர். நாங்களும் 20 தீர்த்த  கிணறுகளிலும் உற்சாகமாக   நீராடிவிட்டு மேற்கு குளக்கரையில் படி ஏறி தெற்கு அரசலாறு நோக்கி புறப்பட்டோம்.

காவிரி ஆறு  தஞ்சை மாவட்டத்தினுள்  நுழையும் பொழுது குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ,அரசலாறு என்று ஐந்து கிளை ஆறுகளாக பிரிகிறது. இவற்றுள் அரசலாறு அரி சொல் ஆறு என்பதன் மருவமே அரசலாறு ஆகும். இது  மகாமக குளத்தின் தெற்கே உள்ளது.இந்த அரசலாறுக்கு அருகில் உள்ள அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் காவல்துறை காவலர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில காவலர்களும் அரசலாறில் குளித்துக் கொண்டிருந்தார்கள். 2004-ல் மகாமகத்தின் போது நான் என் மகன் மூத்தவன் பரத்,ஆறு வயது இளைய மகன் சரத் மற்றும் என் மைத்துனர் திரு.சுரேஷ் மற்றும் என் சகலையின் அப்பா திரு.சேதுராமன் மற்றும் என் சகலை ரவியின் மகன் பிரசன்னா மட்டும் அரசலாரில் குளிக்க வந்தோம். திரு.சேதுராமன் அவர்கள் ஆற்றில் நீந்தியதையும்,எங்களை உற்ச்சகமூட்டியதையும் சகலை திரு ரமேஷிடம் (என் சகலைகள் ரவியும் ரமேஷும் சகோதரர்கள்) நினைவுகூர்ந்தேன்.

திரு.சேதுராமன் அவர்கள் 2014 –ல்அமராகிவிட்டார்.ஒரு மனிதனின் நட்பும் உறவும் அவனின் மறைவுக்கு பின்னரே மேலும் பசுமையாய் இருக்கிறது. நாங்களும் அரசலாறில் அரைமணி நேரம் குளித்துவிட்டு இனிய நினைவுகளோடு எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம்.

அன்று மாலை நாலரை மணிக்கு மேல் மீண்டும் நீராட பொற்றாமரைக் குளத்திற்கு சென்றோம். இது கும்பேஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ளது. மகாமக குளம் போன்றே பொற்றாமரைக் குளத்திலும் ஒரு கரையிலுருந்து இறங்கி நீராடி மறுகரையில் வெளியேறி காவிரிக்கு கிளம்பினோம்.
 
பொற்றாமரைக் குளம்
காவிரிப்படித்துறை சக்கரப்பாணி திருகோயிலுக்கு அருகில் இருப்பதால் அதை சக்கரப்படித்துறை என்றே அழைக்கப்படுகிறது.காவிரியில் பாதுகாப்பு ஏற்பாடு மிக தீவிரமாக இருந்தது. கரையிலிருந்து இருபது அடி தூரம்வரை கயிறால் தடுப்புகளை வைத்து ஒரு எல்லையமைத்து அதன் அருகிலேயே நான்குஅடிக்கொரு காவலரும் பக்கத்தில் ரப்பர் மிதவை படகொன்றும் நிறுத்தப்பட்டு இருந்தது. மைக்கில் காவலர் ஒருவர் பக்தர்களை எச்சரித்து வழியனுப்பிக் கொண்டிருந்தார். நாங்களும் காவிரியில் மூன்றுமுறை மூழ்கி குளித்துவிட்டு கரையேறினோம். மேலக்காவேரி படித்துறை வழியாக வர சிலர் வீபூதி கொடுக்க எங்கள் எல்லார் நெற்றியும் வெள்ளையாகியது.

இவ்வளவு பெரிய அரிதான விழாவில் அன்னதானம் மட்டும் நடை பெறாதது எனக்கு குறையாகவே இருந்தது.எங்கோ ஒரு மூலையில் ஒரு சிலர் மனமுவந்து  சிறிது அன்னதானம் செய்துக்கொண்டு இருந்தனர்.அரசியல் இயக்கங்கள், மடங்கள், தொழில் அதிபர்கள், பெரிய தர்மஸ்தாபனங்கள் என எதுவுமே அன்னதானம் செய்யாமல் இருந்தது கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.  ஏழை மக்கள் தங்கள் பயண முடிச்சுக்களுடன் தண்ணீருக்கும் சாப்பாடுக்கும் கஷ்டப்படுவதை கண்ணால் காண முடிந்தது.அதனால்  மறுநாள் தீர்த்தவாரி திருவிழாவின் போது அன்னதானம் செய்ய உச்சிபிள்ளையார் கோயில் அருகே உள்ள நண்பர் திரு.சீனிவாசனிடம் அன்னதானம் செய்ய பணத்தை கொடுத்தேன்.
ஆட்டோ ஒன்றிலேறி நாகேஸ்வரன் வீதிமுனை வரை வந்திறங்கி முராரி ஸ்வீட் கடையில் பஜ்ஜியும் காபியும் சாப்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு நடைபாதையில் வேடிக்கை பார்த்துக்கொண்டே திரும்பினோம்.
 
நீராட காத்திருக்கும் பக்தர்கள்
வீட்டில் ஈர ஆடைகளை மாற்றிக்கொண்டு  வெளியில் வராந்தாவில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் எல்லோரும் பேசிக்கொண்டும் வீதியில் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டும் நேரம் கழித்தோம் ஆனால் நீராட வரும் பக்தர்களின் கூட்டம் மட்டும் குறையவேயில்லை.
-தொடரும்,...........

PDF ஆக டவுன்லோட் செய்ய / மெயிலாக அனுப்ப கிளிக் செய்யவும் Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms