திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஸ்ரீ
செல்லியம்மன் திருக்கோயிலில் சப்தகன்னிகள் திருஉருவ பிரதிஷ்டை செய்ய சங்கல்பம்
மேற்கொண்டு சனிகிழமையன்று (30.01.2016) மாலை 7 மணியளவில் ஸ்ரீ செல்லியம்மன்
திருக்கோயில்,கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து நான் மற்றும் நண்பர்கள்
திரு.கண்ணன் அவர் மகன் பிரபாகரன், கோயில் தர்மகர்த்தா திரு.சந்திரசேகர், கோயில் அர்ச்சகர்
திரு.ரவிசந்திரன், திரு.ராஜசேகர், டிரைவர் நிர்மல்குமார் உடன் நண்பர்
ஒருவரின் இன்னோவா காரில் இராமேஸ்வரம் புறப்பட்டோம்.
 |
20.01.2016 கும்பாபிஷேகத்தின் போது ராமேஸ்வரம் திருக்கோயில் |
ஜி.எஸ்.டி சாலையில் பயணித்து திருச்சி மானாமதுரை
பரமக்குடி வழியாக மறுநாள் (31.01.2016) விடியற்காலை 5.40 மணியளவில் இராமேஸ்வரம் வந்தடைந்ததோம். அண்மையில் 20.01.2016 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று
இருந்தமையால் பக்தர்களின் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.தீர்த்த நீராடலுக்கு
மூன்று நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று இருந்தனர். கோயிலின் எதிரே இருந்த நடு தெருவில் உள்ள
காசிமடத்தில் தங்குவதற்கு அறை (காசிமடத்தின் மேலாளர் :திரு.மணிகண்டன்
அறை எண்
10,11 முதல்
மாடி) எடுத்தோம்.
 |
அக்னி தீர்த்தம் |
முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில்(கடல்) நீராடி, பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில்
நீராடிவிட்டு தங்கும் அறைக்கு வந்து ஈர ஆடையை மாற்றிக்கொண்டு மீண்டும் கோயிலில் மூலவர் இராமநாத சுவாமியை தரிசித்துவிட்டு அடுத்து பர்வத வர்தனி அம்மனை தரிசித்தோம்.அதன் பின் கோயிலில் உள்ள மற்ற
தெய்வங்களையும் தரிசித்துவிட்டு
அறைக்கு
திரும்பினோம்.
 |
ராமேஸ்வரம் திருக்கோயில் முன்பாக நான் மற்றும் நண்பர்கள் திரு.கண்ணன் அவர்
மகன் பிரபாகரன், கோயில் தர்மகர்த்தா திரு.சந்திரசேகர், கோவில் அர்ச்சகர் திரு.ரவிசந்திரன், திரு.ராஜசேகர், கிளிக்கியது :
டிரைவர் நிர்மல்குமார்
|
மதியமானதால் மடத்திற்கு எதிரில் இருந்த கணேஷ்
மெஸ்ஸில் மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது ஓய்வுக்கு பின் அறையை காலி செய்து விட்டு தேவிபட்டிணம் நோக்கி
புறப்பட்டோம்.
 |
தேவிபட்டிணம் நவக்கிரக சன்னதியின் முன் |
 |
நவக்கிரகங்கள் |
 |
தேவிபட்டிணம் நவக்கிரக சன்னதியில் |
(ராவணனால் சீதை கடத்தி
செல்லப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டாள். அவளை மீட்க வந்த ராமபிரான் தேவிபட்டினம்
கடற்கரையில் அமர்ந்து மணலை ஒன்பது பிடி எடுத்து பிரதிஷ்டை செய்தார். அந்த ஒன்பது கற்கள் `நவபாஷாணம்' என்ற பெயரில் நவக்கிரகங்களாக வழிபடப்படுகிறது. இந்த ஒன்பது கிரகங்களும்
கடலுக்குள் இருப்பது குறிப்பித்தக்கது.)
சிறு பாலத்தில் நடந்து கடல் நீரில் இருந்த நவக்கிரகங்களை வணங்கி ஆசிப் பெற்றோம்.
பின் எங்கள் இன்னோவா கார் உத்திரகோசமங்கை
திருத்தலம் நோக்கி பயணித்தது.
சுமார் 5 மணியளவில் உத்திரகோசமங்கை கோயில்
வந்தடைந்தோம்.
 |
உத்திரகோசமங்கை திருக்கோயில் முன் |
(பெண்கள் வேதம்
சொல்லக்கூடாது என்ற வார்த்தைக்குப்புறம்பாக
இங்கு தேவியே இறைவனிடம் வேதம் கற்றதாக ஸ்தல
வரலாறு கூறுகிறது. கோசம் என்றால் வேதம் என்று
பொருள், உத்திரம் என்றால் பதிலிறுத்தல் என அர்த்தம். இறைவன் இறைவிக்கு வேதத்தினை இங்கு உபதேசிக்கிறார். எனவெ உத்திரகோசம் என
அம்பிகையின் திரு நாமம்.
 |
அன்னை மங்களேஸ்வரி சிவனிடம் வேத உபதேசம் பெரும் காட்சி |
மண்டோதரிக்குத் திருமணமாகாத காலம். அவள் ஈசனை நோக்கிக் கடுந்தவம்
புரிந்தாள். ஈசன் அவளுக்குக் காட்சி தந்தபின்தான்
அவளுக்குத் திருமணம் ஆயிற்று.அப்போது
ஈசன் தனக்குத்தனே சூட்டிக்கொண்ட நாமம் மங்களநாதன்.
ஆயிரம் முனிவர்கள் அருந்தவம் இயற்ற உத்திரகோச மங்கைக்கு வந்த
அதே நேரத்தே மண்டோதரியும் இலங்கையில் தவம் இருந்தாள். ஈசனும் வேதாகம நூல் ஒன்றைப்
பாதுகாக்கவேண்டி அதைத் தவமிருந்த முனிவர்களிடம் ஒப்புவித்து, “இராவணன் எப்போது என்னைத் தீண்டுகிறானோ
அப்போது இங்குள்ள அக்கினி தீர்த்தத்தில் அக்கினிப் பிழம்பாகத் தோன்றுவேன்” எனக்கூறி, மண்டோதரிக்குக் காட்சி கொடுக்க இலங்கை
சென்றார். மண்டோதரியின் முன் குழந்தையாய்க்
காட்சி தந்த இறைவனை இராவணன் தொட்டதும் அவர் உத்திரகோச மங்கையில் அக்கினி
தீர்த்தத்தில் அக்கினிப் பிழம்பாய்த் தோன்றினார். அக்கணத்தே 999முனிவர்களும்
அக்குளத்தில் குதிக்க மாணிக்கவாசகர் மட்டும் வேதாகம நூலைப் பாதுகாத்து வைத்தார்.அதனால் அவர் அட்டமா சித்தி பெற்றார்.
 |
சஹஸ்ர லிங்கம் |
999 முனிவர்களையும்
லிங்கங்களாக்கித் தானும் ஒரு லிங்கமாக ஆனார். அதுவே சகஸ்வரலிங்கமாய்ற்று. மாணிக்கவாசகர் எடுத்த லிங்க வடிவு இன்னும் இங்கே உள்ளது. மிகப் பழமை வாய்ந்த இக்கோயில் சிறப்பு
வாய்ந்த சிவபுண்ணியத் தலமாக விளங்குகிறது.)
 |
மாணிக்கவாசக பெருமான் |
தனித்தனி சன்னதிகளில் இருந்த மங்களநாதன்
மங்களேஸ்வரி தரிசனமும் ஆசியும் பெற்றோம்.
(இங்குள்ள நடராசரின் மரகதச்சிலை போல வேறு எந்தச்
சிவத்தலத்திலும் கிடையாது.இம்மரகத நராசருக்கு வருடம் ஒருமுறை
ஆருத்ரா தரிசனத்தன்று அபிடேகம் (அபிஷேகம்) நடைபெறும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சேத்திரத்தில்தான் ஆருத்ரா
தரிசனம்.. அன்று பகல் 11மணிக்கு
அபிசேகம் துவங்கும். இரவு 12மணிவரை
தரிசனத்துக்கு வைக்கப்படும். இரவு 12 மணிக்கு அபிடேகம், பூசைகள் முடிந்தவுடன் சந்தனக்
காப்பிட்டு மூடிவைக்கப்படும். இவரை அடுத்த வருடம் இதே நாளில்தான்
மறுபடியும் வெளியில் எடுத்து இம்முறையில் பூசைகள் செய்து தரிசனத்துக்கு
வைக்கப்படுவார்.)
 |
மரகத நடராசர் |
மரகத நடராசரின் தரிசனமும் ஆசியும் பெற்றோம். பின் உத்திரகோசமங்கை
திருத்தலம்.இத்திருத்தலத்தின் விருட்சம் இலந்தை மரம். இது மூவாயிரம்
ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
 |
ஸ்தல விருட்சம் : இலந்தை |
உத்திரகோசமங்கையின் 300 அடி தூரத்தில் உலகை ஆளும் ப்ரத்யட்ச அன்னை ஸ்ரீ லலிதாவின்
தளபதி திருமங்கைகாளி எனும் பேரில் வடக்கு நோக்கி ஆசி வழங்கிக்கொண்டு வீற்றுருந்தாள் அன்னை வாராஹி.
 |
அன்னை வராஹி திருக்கோயில் முன் |
அன்று ஞாயிற்று கிழமை.மாலை ராகு கால அபிஷேகம் பெற்று
அலங்காரமாய் திரிசூலம் தரித்து மஞ்சள் காப்பிட்டு 6 மணிக்கு தரிசனம் தந்தாள் அன்னை வாராஹி. காணக்கிடைக்காத காட்சி. எங்களுக்காகவே பிரத்யோகமான
காட்சி. என்றும் அருளாசி தந்து கொண்டே இருப்பவள் இன்று அழைத்து ஆசியும் தரிசனமும் தந்து
இருக்கிறாள். எங்கள் சங்கல்பமான சப்தகன்னிகள் திருஉருவ பர்திஷ்டை செய்ய மேற்கொண்ட இந்த
பயணம் அன்னை வாராஹியின் ஆசீர்வாதமுடன் இனிதே நடந்தேறும்.
ஸ்ரீ வராஹி காயத்ரி :
ஓம் வராஹமுக்ய வித்மஹே
தண்டநாதய தீமஹி
தன்னோ அரிகிரி ப்ரச்சோ தயாத்!
அருளோடும் ஆனந்தமோடும் அன்னையிடம் விடைப்பெற்று
சென்னையை நோக்கி எங்கள் பயணம் திரும்பியது. நேரம் நேற்றைய தினம் போல் 7 மணி
ஆகியது.
 |
லிங்கத்தில் சிவபெருமான் |
(நாங்கள் சென்னையில் இருந்து 7
பேருடன் வாரத்தின் 7வது நாளில்(சனிக்கிழமை) சப்தமி திதியில் (7 வது நாள்) 7
மணிக்கு புறப்பட்டோம்.பயணம் முடிந்து உத்திரகோசமங்கையில் இருந்து
திரும்பியதும் 7 மணிக்கு. எல்லாம் சப்தக்கன்னிகளின்(ஏழு கன்னிமார்கள்) ஆசீர்வாதம்.)
12 கருத்துரைகள்:
புனிதப்பயணத்தில் கலந்துகொண்ட உணர்வு. பகிர்வுக்கு நன்றி.
@Dr B Jambulingam நன்றி சார்
நான் எழுத நினைத்த பல விஷயங்களை நீங்கள் எழுதி பகிர்து விட்டீர்கள். மிக்க நன்றி.
நல்ல பயணம். இரவு பயணம் செய்ததுதான் மனதை உறுத்துகிறது.
@N.R.Jayaramanகருத்துரைக்கு நன்றி
@பழனி.கந்தசாமிநன்றி சார்.உங்களது மனதை உறுத்தியதை போலவே அன்று இரவு நடந்த ஒரு விஷயத்தை இப்பதிவில் நான் குறிப்பிட வில்லை.ஆனாலும் ஒரு தகப்பனைப் போல கனிவுடன் நீங்கள் இரவுபயணத்தை "உறுத்துகிறது" என்று குறிப்பிட்டதும் அன்று நடந்த விஷயத்தை மறக்காமல் இக்கருத்துரையில் குறிப்பிடுகிறேன்.(நான் இரவுபயணத்தை விரும்புவது இல்லை அன்று நேரம் விரைவு கருதி பயணித்தோம்.அதுமட்டுமில்லாமல் நான் இரவுபயணத்தில் தூங்குவதில்லை.கொஞ்சம் கலாயித்தும்,பேசிக்கொண்டேயும் வருவேன்) திருச்சியிலிருந்து புதுக்கோட்டை,காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் செல்ல வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.ஆனால் திருச்சியிலிருந்து டிரைவர் மேம்பாலத்திலேயே பயணித்ததால் புதுக்கோட்டை வழியை கடந்து 20 கிலோமீட்டர் சென்றதால் மதுரை ரோட்டில் பயணிக்க வேண்டிய கட்டயாத்தில் பயணித்தோம்.பின் மானாமதுரை வந்ததும் ஒரு சின்ன பேருந்து நிறுத்ததில் இருந்த டீக்கடையில் டீ அருந்தி விட்டு மீண்டும் பயணித்தப் போது கார் கொஞ்சம் அலைபாய்ந்தது.அப்போது நண்பர் திரு கண்ணன் டிரைவரிடம் தூக்கம் வந்தா கொஞ்சம் முகத்த கழுவிக்கோ என்றார்.டிரைவரும் காரை நிறுத்தி முகம் கழுவிக்கொண்டார். மீண்டும் பயணித்தோம்.இம்முறை கொஞ்சம் அதிகமாகவே கார் அலைபாய்ந்தது.நான் உஷாரானேன்.நிர்மல்(டிரைவர்) நீ கொஞ்சம் தூங்கு நான் வேண்ணா கார் ஒட்றேன் என்றதும் நிர்மல் சம்மதித்தும் நான் டிரைவரானேன் அங்கிருந்து இராமேஸ்வரம் கோயில் வரை(சுமார் 120 கிலோமீட்டர் இருக்கும்) நானே ஓட்டி வந்து அடைந்தோம்.இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அதுவரைக்கும் நான் இன்னோவா கார் ஓட்டி பழகியது இல்லை) எல்லாம் அன்னை வராஹியின் துணைதான்.
GOD IS ALWAYS WITH YOU.
@Sankaranarayanan C S Sthankyou sir for your comment and blessings
அருமையான பயணக் கட்டுரை.சில முறை ராமேஸ்வரம் சென்றிந்தாலும் தேவிப்பட்டினம் நவக்ரஹ சந்நிதி குறித்த விவரம் எனக்கு புதிது.உடன் பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது.நன்றி.
அருமையான பயணக் கட்டுரை.சில முறை ராமேஸ்வரம் சென்றிந்தாலும் தேவிப்பட்டினம் நவக்ரஹ சந்நிதி குறித்த விவரம் எனக்கு புதிது.உடன் பயணம் செய்த அனுபவம் ஏற்பட்டது.நன்றி.
Very Good Darshaan - as though we have been there.
good luck. god bless
pl avoid night travel next time.
எனக்கு புது தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .
பல புதிய தகவல்கள் நன்றி.
பயணக் கட்டுரையும் பயணம் பொன்றதே. வாழ்த்துகள்
(வேதாவின் வலை)
Post a Comment